*திருமலை கொலை வழக்கில் பொலிஸ் அதிகாரி சாட்சியம்
"நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்றுரவைகளைக் காணவில்லை. புற்தரையிலிருந்தே அவற்றை மீட்டேன். தற்போது வெற்றுத் தரையில் ரவைகள் கிடப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாதென" திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
முன்னர் நடைபெற்ற விசாரணைகளின்போது புற்தரையில் இருந்தே ரவைகளை மீட்டிருந்ததாக அவர் கூறியிருந்தார். ஆனால், நேற்றைய விசாரணைகளின் போது இச்சம்பவத்தில் பலியான ஒருவரின் தந்தையான டாக்டர் காசிப்பிள்ளை மனோகரனால் சம்பவ இடத்தை காட்சிப்படுத்திய வீடியோ தொகுப்பு காண்பிக்கப்பட்டபோது, அதில் வெறும் தரையிலேயே வெற்று ரவைகள் இருந்ததைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்போது திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தொடர்ந்தும் தனது சாட்சியத்தில் மூன்றாவது நாளாக நேற்று தெரிவிக்கையில்;
நான் நான்காம் திகதி ஜனவரி 2006 அன்று தான் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றிருந்தேன்.
நான் செல்வதற்கு முன்னர் வேறு பொலிஸார் அவ்விடத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
நான் 1986 ஆம் ஆண்டு முதல் பொலநறுவை, கல்முனை, கந்தளாய், உகணை, அம்பாறை, பொத்துவில், திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளேன்.
ஆனால், பொத்துவில் உக்குரல்லை, திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையங்களிலேயே பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளேன்.
நான் துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து திருகோணமலையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், கடந்த 2007 திருகோணமலை சந்தையில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் இச்சம்பவத்திலேயே இவ்வாறான இழப்பு நேரிட்டிருந்தது.
இந்த ஐந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக 12 விசேட அதிரடிப்படையினரும் 1 பொலிஸாரும் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஆனால், இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக எனக்குத் தெரியாது. பின்னர் எனக்கு அனுப்பிவைக்கப்பட்ட தொலைநகல் மூலமே அதனை அறிந்துகொண்டேன்.
இவர்கள் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் திருகோணமலை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனரெனத் தெரிவித்தார்.