பதுளையில் இடம்பெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் மரணமானதுடன் பெண்ணொருவரும் ஒன்பது வயதுச் சிறுவனும் படுகாயமடைந்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளையிலிருந்து வேவல்ஹின்ன என்ற இடத்திற்குச் சென்ற இ.போ.ச. பஸ்ஸிலிருந்து கீழே விழுந்த ஒருவர் மரணமாகியுள்ளார்.
பதுளை பிரதான அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராகக் கடமையாற்றிய 35 வயதுடைய டி.எம்.குமாரதாச என்பவரே மரணமானவராவார்.இது தொடர்பாக ஸ்தல விசாரணையை மேற்கொண்ட பதுளைப் பொலிஸ் வாகனக் குற்றத் தடுப்புப் பிரிவினர், சம்பந்தப்பட்ட பஸ் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
அன்றைய தினத்தில் பதுளை சரஸ்வதி தேசியக் கல்லூரி முன்பாக கெப் வாகனமொன்றும்,ஆட்டோ வண்டியொன்றும் நேருக்கு நேராக மோதியதில் ஆட்டோ சாரதியான 19 வயதுடைய ரஜாப்தீன் மொகமத் இம்ரான் ஸ்தலத்திலேயே மரணமானார்.
அதே ஆட்டோவில் பயணம் செய்த நோனா நூன்ரபீக் மற்றும் நவ்பர் இம்ரான் என்ற ஒன்பது வயதுச் சிறுவனும் படுகாயமடைந்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இவ் விபத்து தொடர்பாக பதுளைப் பொலிஸ் வாகனக் குற்றத்தடுப்பினர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் விபத்துக்குள்ளான கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.