* மு.கா.தலைவர் ரவூப்ஹக்கீம்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நான்கு உள்ளூராட்சிசபைகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 முஸ்லிம்காங்கிரஸ் உறுப்பினர்கள் சனிக்கிழமை மாலை ஏறாவூர் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலக கேட்போர் கூடத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.பி.ஹசனலி தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் முன்னிலையில் சக்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
சரியான முடிவுகள் சரியான சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட வேண்டும். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் எடுக்கும் முடிவு, பிழையான சந்தர்ப்பத்தில் எடுக்கப்படும் சரியான முடிவாகவும், சரியான சந்தர்ப்பத்தில் எடுக்கப்படும் பிழையான முடிவாகவும் இருந்து விடக்கூடாது என்பதே கட்சியின் விருப்பமாகும்.
வடகிழக்கை பிரித்துவிட்டு அதனூடாக முஸ்லிம்கள் ஆறுதல் அடையலாம் என்று நினைத்திருந்தவர்கள் தங்களுடைய அரசியல் அந்தஸ்துக்கு இதனால் கேடுவிளைந்து விடுமோ என்று அச்சப்படுகின்ற இந்தக் காலத்தில் முஸ்லிம்காங்கிரஸின் அந்தஸ்த்து எவ்வளவு பெறுமதியானது என்பதை கடந்த ஓரிரு வாரங்களில் சிறப்பாக உணர்த்திருக்கிறார்கள்.
நாம் எடுக்கப்போகும் தீர்மானம், சரியான சந்தர்ப்பத்தில் எடுத்த சரியான தீர்மானமாக அமைந்தது என்பதை கிழக்குமாகாணசபைத் தேர்தலுக்குப் பிறகு எல்லோரும் உணர்ந்து கொள்ளும் விடயமாக அமைய வேண்டும்.
எம்மில் பெருவாரியானவர்கள் எமது கட்சிச் சின்னத்தின் மகிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறோம். இன்று அரசில் இருக்கும் அமைச்சர்கள் இதைக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்துவதற்குப் பாவிக்கிறார்கள்.
"நாம் அமைச்சுப் பதவிகளை விட்டுத் தருவதற்கு தயாராக இருந்தோம். ரவூப் ஹக்கீம் மரச்சின்னத்தை விடுவதற்குத் தயாரில்லை. அவரது இந்தப் பிடிவாதம் தான் முஸ்லிம்களுக்கு முதலமைச்சரை இல்லாமற் செய்யப் போகிறது என்று இவர்கள் கதையளக்கின்றனர்.
கிழக்கில் முதலமைச்சர் ஒருவர் முஸ்லிமாக வந்து விட்டால் அது மு.கா.தலைவரின் பதவிக்குச் சவாலாக வந்துவிடும் என்று தலைவர் ரவூப்ஹக்கீம் பயப்படுகிறார் என்றும் இதனால் தான் முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை என்றும் தீவிரமாகப் பிரசாரம் செய்ய முயல்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியற் சக்தியை இந்த மாகாண சபைத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும் என்பதில் நாம் மிக உறுதியுடன் இருக்கிறோம். அந்த உறுதியை கட்சியின் ஏகோபித்த முடிவாகக் கொண்டு வருவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், கட்சி எடுக்கும் முடிவை முன் கூட்டியே அறிந்து கொண்டு, தங்களுடைய உபாயங்களை மாற்றிக் கொள்வதற்கு, எம்மை வீழ்த்த நினைக்கும் சக்திகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
எனவே தான் எமது முடிவை தாமதிக்க முடிவுசெய்தோம். இன்னும் தீர்க்கமாக என்னென்ன விதத்தில் எதிர்த்தரப்புகளின் உபாயங்கள் அமைகின்றன என்பதை கூர்மையாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.
எமது எதிரிகள் என்பது அரசாங்கம் மட்டுமல்ல அரசாங்கத்துக்குள் உள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள முஸ்லிம்கள் கூட எமது எதிரிகளே. இவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் வளர்வதை விரும்பவில்லை.
முஸ்லிம் முதலமைச்சர் பதவியைக்கைபற்றுவது அசாத்தியமானது என்று எண்ணிக் கொண்டு, அதை சாத்தியமாக்குவதற்கு மிக இலகுவான வழியைத் தேடுவதில் என்னபிழை என்றும் எமது எதிரிகளால் பிரசாரம் செய்யப்படுகிறது.
இலேசாகப் போய்த் தட்டிப் பறிக்கப்படும் ஒரு பதவியாக இந்த முதலமைச்சர் பதவியை நாம் பாப்பதன் மூலம் அது நிரந்தரமாக இந்த சமூகத்துக்கு இல்லாமற் போகின்றது. அதன் மூலம் எமக்கு என்ற ஒரு சுயாட்சியும் இல்லாமற் போகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுத்து விட்டால் அந்த முடிவுக்குப் பின்னால் முஸ்லிம் சமூகத்தை கொண்டு வரச் செய்யும் கடமையை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சாதித்துவிடும் என்ற பீதி இருக்கிறது.
இந்தக் தேர்தல் நடப்பதும் பிற்போடப்படுவதும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப் போகும் தீர்மானத்தில் இருக்கிறது என்பதை கூறிவைக்க விரும்புகிறேன். அரச மேல் மட்டத்தில் நிச்சயமாக மு.கா.முடிவைப்பொறுத்து இதற்கு ஏற்றவிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
தங்களுக்குச் சாதகமான முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துவிட்டால் தேர்தலை நடத்துவது, இல்லையென்றால் தேர்தலைப் பிற்போடுவது என்பதில் அரசு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தல் நடத்தப் படுவதையே விரும்புகிறது. ஏனெனில் இக்கட்சி தேர்தல்களுக்குப் பயந்து ஓடி ஒதுங்கிக்கொள்ளும் கட்சியல்ல. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், ஐ.தே.க.வும் ஒதுங்கிக் கொண்டது என்பதற்காக நாங்கள் ஒதுங்காமல் தைரியமாக முகம் கொடுத்து இன்று ஒரு உன்னதமான நிலையில் இருக்கிறோம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக நாம் எடுக்கும் தீர்மானம் இந்த சமூகத்தின் ஒற்றுமையை உலகறியச்செய்யும் தீர்மானமாகவும், தீர்க்கதரிசனத்துடனும், தூரநோக்குடனும் செய்யப்பட்ட தீர்மானமாகவும், கட்சிப் போராளிகளின் பெருவிருப்பத்துக்குரிய விடயங்கள் நிறைவேறுகின்ற தீர்மானமாகவும் ஒரே நேரத்தில் உடனடியாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் கடினமான விடயமாகும்.
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் கட்சியை மிகப்பெரிய தியாகங்களோடு களமிறக்குகின்ற தேர்தலாக மாறியிருக்கிறது. இத்தேர்தலோடு எம்மை வீழ்த்தி குழியில் போட்டு மூடிவிடலாம் என்று நினைக்கும் சக்திகளுக்கு ஒரு சரியான பாடத்தை நாம் புகட்டியாக வேண்டும்.