தனது 9 வருட ஆட்சியில் மூன்று தவறுகளை இழைத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யுடன் கூட்டணி அமைத்ததும் 2004 இல் ஐ.தே.க. அரசாங்கத்தை பதவிநீக்கம் செய்தமையும் தான் இழைத்த மூன்று தவறுகளில் இரண்டென குறிப்பிட்டிருக்கும் சந்திரிகா, மூன்றாவது தவறு என்ன என்பதை எதிர்காலத்தில் வெளியிடுவாரெனக் கூறியுள்ளார்.
சிங்கள வார இதழொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே சந்திரிகா குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இனநெருக்கடிக்கு தீர்வுகாண தனது கட்சியான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் கூட்டணி சேர வேண்டுமெனவும் அதன் மூலம் பொதுவான இணக்கப்பாடு காண்பதற்கான பணியில் ஈடுபட வேண்டுமெனவும் சந்திரிகா கூறியுள்ளார்.
அதேசமயம், தானோ தனது மூத்த சகோதரியான சுனேத்ரா பண்டாரநாயக்கவோ அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
சந்திரிகாவின் சகோதரரான முன்னாள் அமைச்சர் அநுர பண்டாரநாயக்க காலமானதையடுத்து பண்டார நாயக்க குடும்பத்தினரின் பல தசாப்த கால அரசியல் சகாப்தம் இலங்கையில் முடிவுக்கு வந்திருக்கிறது.