தற்கொலைக் குண்டு தாரிகள் அதிகாரிகளிடம் சரணடைந்தால் 1 கோடி ரூபாவும் வெளிநாட்டில் புதுவாழ்வும் அளிக்கப்படுமென அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுவரொட்டிகள் சிவப்பு, மஞ்சள் வர்ணத்தில் கொழும்பில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
உங்கள் வாழ்வும் இளமையும் இலங்கைக்கு தேவைப்படுகிறது. இதனை நீங்கள் ஏன் பிரபாகரனுக்கு கொடுக்கிறீர்கள் என்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருப்பதுடன் துண்டாடப்பட்ட தலையின் புகைப்படமும் அதில் காணப்படுகிறது.
தற்கொலைதாரிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக நாம் கருதுகிறோம். அவர்கள் வாழ்வதற்கு உரிமை உடையவர்கள் தங்களைத் தாமே கொல்வதற்கு அல்ல என்று பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.
இருவாரங்களுக்கு முன்னரே சுவரொட்டிகள் கொழும்பில் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு அரசாங்கம் பொறுப்பென்பதை முதலில் அதிகாரிகள் மறுத்திருந்தனர். இவைதொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகளும் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
ஆயினும் இதன் பின்னணியில் தாங்கள் இருப்பதாக நேற்று திங்கட்கிழமை அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேநேரம் சரணடைவோருக்கு பணத்திற்கு அப்பால் மன்னிப்பும் புனர்வாழ்வும் தொழில்வாய்ப்பும் வழங்கப்படுமென ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
ஆனால் இதற்கான பணத்தை அரசு எவ்விதம் பெற்றுக் கொள்ளும் என்றோ இதனைப் பெற்றுக்கொள்ளும் தகைமை எப்படி தீர்மானிக்கப்படும் எனவோ அமைச்சர் விபரிக்கவில்லை.
அதேசமயம் எவரும் இதுவரை சரணடைவது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லையென ஹெகலிய கூறியுள்ளார்.
மேலும் வட போர்முனையிலுள்ள படையினர் சிக்குன்குன்யா, டெங்கு நோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
கடுமையான மழைகாரணமாக இராணுவத்தினர் தமது திட்டத்தில் சிலவற்றை மாற்றிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டதாக அமைச்சர் ஹெகலிய கூறியிருக்கிறார்.