* இந்தியாவில் அமைச்சர் டியூ குணசேகர
தமிழ்க் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணியொன்று விரைவில் தோற்றம் பெற உள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளிவருமெனவும் அரசியலமைப்பு தேசிய ஒருங்கிணைப்பு விவகார அமைச்சர் டியூ குணசேகர இந்தியாவில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான டியூ குணசேகர இந்திய (மார்க்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டார்.
தமிழ்க்கட்சிகளின் புதிய கூட்டணியானது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று `இந்து' பத்திரிகைக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் புதிய கூட்டணியானது இலங்கையின் இனநெருக்கடிக்கு சமாதானத்தீர்வு காண்பதற்கான பணிகளில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
`ஈழம் கோரிக்கையை கைவிட விடுதலைப் புலிகள் தயாராக இல்லை. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பல தடவை முயற்சிகளை மேற்கொண்ட போதும் மாற்றுத் தீர்வை ஏற்றுக் கொள்ள புலிகள் ஆயத்தமாக இல்லை.
விடுலைப் புலிகளின் தமிழ் மக்கள் மீதான பிடி இப்போது பலவீனமடைந்து வருகிறது. ஆதலால் தமிழ் பேசும் மக்களுக்கான அனுகூலங்களை உறுதிப்படுத்துவதற்காக சட்ட ரீதியாக எவற்றை வழங்க முடியுமோ அதனை வழங்குவதற்கு இது பொருத்தமான தருணமாகும். அரச சேவையில் இருமொழிக் கொள்கையை அமுல்படுத்துவது இந்த இலக்கை வெற்றிக் கொள்வதற்குரிய சாதகமான நடவடிக்கையாகும்.
சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவது இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். இலங்கையில் அரச சேவையில் இருமொழிக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்களில் பயன்படுத்தப்படுவதற்காக பரஸ்பரம் இருமொழிகளையும் கற்குமாறு ஊக்குவிப்பளிக்கப்படுகிறது. தமிழுக்கு சம இடம் அளிக்கப்படுவதன் மூலம் ஆளுக்கு ஆள் காணப்படும் இனரீதியான பிளவை முடிவுக்கு கொண்டுவர முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குரிய போதிய வளங்கள் பற்றாக்குறையாக இருப்பது இரு பிரிவினருக்கும் இடையில் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதற்கு வழிவகுக்கிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் தமிழ் உத்தியோக பூர்வமொழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அது நடைமுறைப்படுத்தப்பட பல வருடங்கள் எடுத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் பதவிக்கு வந்த அரசாங்கங்களால் இதனை அமுல்படுத்த முடியவில்லை.
இரு வாரங்களுக்கு முன்னர் 5900 சிங்களவர்கள் தமிழில் முதலாவது பரீட்சைக்கு தோற்றினர். வட, கிழக்கில் 1065 தமிழர்கள் சிங்களத்தில் பரீட்சை எழுதினர். நான் அமைச்சராக பதவியேற்றவுடன் இருமொழிக் கொள்கை அமுலாக்கம் குறித்து அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்திருந்தேன். தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து என்பதே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். அதாவது இரு மொழிகள், ஒரு நாடு என்பதே அந்த நிலைப்பாடாகும்.
100 சதவீதம் தமிழ் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் 100 சதவீதம் சிங்கள பொலிஸாரே கடமையாற்றினர். இப்போது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் குறைந்தது ஒரு தமிழ் பேசும் பொலிஸ்காரரையாவது நாம் நியமித்துள்ளோம். கடந்த இரு வருடங்களில் 3 ஆயிரம் பொலிஸாருக்கு தமிழில் பணியாற்றுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழ்மொழி கற்பிக்கப்பட வேண்டுமென புலிகள் விரும்பினர். மொழியை கற்பிப்பதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்க வேண்டுமென நான் பணித்திருக்கிறேன்.
நாட்டில் பிரிவினை இருக்கக்கூடாது. ஆனால், சம உரிமைகள் அளிக்கப்படவேண்டும். இருநாடுகளுக்குமிடையிலான பிணைப்புகளை வலுப்படுத்த இந்தியா ஒத்துழைத்து வருகின்றது. ஓரிரு கட்சிகளைத் தவிர எமது கட்சிகள் யாவுமே புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டுமென்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளன என்றும் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார்.