*போலிப் பிரசாரம் இடம்பெறுவதாக சாடுகிறார்
கெஹலியகிழக்கு மாகாணத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாதென தெரிவித்திருக்கும் பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவ்வாறு வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவையெனவும் தெரிவித்தார்.
ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;
"கிழக்கு மாகாண தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைக்கப் போவதாக போலியான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும். தேர்தலை ஒத்தி வைக்கும் எத்தகைய நோக்கத்தினையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லையென்பதை உறுதிப்படத் தெரிவிக்கிறேன்.
கிழக்கு தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்தை விடுவித்ததன் பின்னர் அப்பகுதி மக்களிடம் அவர்களுக்கான தலைமைத்துவத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் தலைமைத்துவத்தை மேலும் பாதுகாப்பதற்கே அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இதேவேளை, புலிகளின் முகவர் அமைப்புகளை தேடிக் கண்டு பிடித்து விசாரணை செய்யும் நடவடிக்கையை பிரித்தானிய அரசாங்கம் முடுக்கி விட்டிருப்பதாக அந்நாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல சர்வதேச நாடுகள் புலிகளுக்கு தடை விதித்துள்ள போதிலும் புலிகள் அந்நாடுகளில் சட்ட விரோதமான முறையில் இயங்கியே வருகின்றனர்.
பிரித்தானியாவும் புலிகளை தடை செய்துள்ள ஒரு நாடாகும். அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு பயங்கரவாத அமைப்பு அங்கு சட்டவிரோதமான முறையில் செயற்படுவதை தடுக்க அந்நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகளை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.