ஒலிம்பிக் தீபத்தை சீனா நேற்று திங்கட்கிழமை கோலாகலமாக வரவேற்றது.
தியானமென் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட சீன ஜனாதிபதி ஹு ஜிந்தோ முதலில் தீபத்தை ஏந்தி விழாவை ஆரம்பித்து வைத்தார்.
சீன அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்ற அச்சத்தின் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தவாரம் ஒலிம்பிக் தீபத்தை சம்பிரதாய பூர்வமாக ஏற்றும் நிகழ்வு கிரேக்கத் தலைநகர் ஏதேன்ஸில் நடைபெற்ற போது திபெத்தியர்களின் மீதான சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டக் காரர்கள் பொலிஸாருடன் மோதல்களில் ஈடுபட்டதுடன் நிகழ்வுக்கு இடையூறு விளைவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று கஸகஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஒலிம்பிக் தீபம் சீனாவில் எதிர்வரும் ஆகஸ்ட்டில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர். 20 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இவ் ஒலிம்பிக் தீபம் பெய்ஜிங்கை வந்தடையவுள்ளது.
சீனாவுக்குச் சொந்தமான விமானமொன்றில் கிரேக்கத்திலிருந்து பெய்ஜிங் விமான நிலையத்தை வந்தடைந்த இத் தீபத்தை நூற்றுக்கணக்கான பாடசாலை சிறுவர்கள் கொடிகளை அசைத்தவாறு வரவேற்றனர். அத்துடன், `ஒரே உலகம் ஒரே கனவு' என்ற ஒலிம்பிக் வாசகத்தைப் பாடி மாணவர்கள் கரகோஷமெழுப்பினர்.
பின்னர் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியானமென் சதுக்கத்திற்கு இத் தீபம் எடுத்துச் செல்லப்பட்டது. செங்கம்பளம் விரிக்கப்பட்ட மேடையின் மீது நின்று தீபத்தை ஏற்றிய ஜனாதிபதி ஹு ஜிந்தோ பின்னர் அதனை சீனாவின் ஒலிம்பிக் சாம்பியன் லியு ஸியாங்கிடம் கையளித்தார். அத்துடன், பெய்ஜிங்கின் 2008 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயணம் ஆரம்பித்துவிட்டதையும் அவர் பிரகடனப்படுத்தினார்.
1896 இல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் முதன் முதலில் நடைபெற்ற ஏதேன்ஸின் பனாதிணைகோ அரங்கத்தில் வைத்து ஒலிம்பிக் தீபத்தை சாம்பிரதாய பூர்வமாக சீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தலைமையதிகாரி லியு கியுவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.