எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொண்டிங், சைமண்ட்ஸ், பிரெட் லீ ஆகியோர் 2 வாரம் மட்டும் விளையாடலாமெனத் தெரிகிறது.
ஐ.பி.எல் போட்டி ஏப்ரல் 18 முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே மேற்கிந்தியத் தீவுகளில் அவுஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மே 30 ஆம் திகதி தொடங்குகிறது.
அதற்கு முன்னதாக மே 16 முதல் 18 ஆம் திகதி வரை பயிற்சி போட்டியில் அவுஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. மே 8 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுக்கு புறப்படுகிறது.
அதற்கு முன்னதாக 6 நாள் பயிற்சி முகாமுக்கு அணிப் பயிற்சியாளர் ரிம் நீல்சன் ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக குயின்ஸ்லாந்தில் கூடுமாறும் வீரர்களைக் கேட்டுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் சபை.
இதனால் ஐ.பி.எல்.போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் திட்டமிட்டபடி பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.