* கும்பிளே கூறுகிறார்
சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற கொஞ்சம் வாய்ப்பிருந்தது. ஆனால், ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சுத்தமாக ஒத்துழைக்க வில்லை. தொடர்ந்து துடுப்பாட்ட வீரர்களின் சொர்க்கபுரியாகவே இருந்தது. இதனால், ரசிகர்கள் வெறுத்துப் போயினர். ஆடுகளம் படுமந்தமாக இருந்ததாக இந்திய அணியின் கப்டன் கும்பிளே வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் கூறுகையில்;
" நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது சுழற்பந்து வீச்சு எடுபடுமென எதிர்ப்பார்த்தோம். ஆனால், ஆடுகளம் மந்தமாக இருந்தது. வெயில் கொளுத்தும் நிலையில் இப்படிப்பட்ட ஆடுகளத்தில் பந்து வீசுவது மிகவும் கடினம். இப்போட்டிக்கு முன்பாக மழை பெய்ததால் சரியான முறையில் ஆடுகளத்தைத் தயார் செய்ய முடியாமல் போயிருக்கலாம். ஆமதாபாத் போட்டிக்கு மிகச் சிறந்த ஆடுகளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.
சென்னையில் சேவாக் ஓட்ட மழை பொழிந்தார். இவரது ஆட்டத்தை பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போல் இருந்தது. 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த டிராவிட்டின் ஆட்டமும் இருந்தது. இப்போட்டியில் தென்னாபிரிக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். வரும் போட்டிகளில் இவர்களை வீழ்த்த அதிரடித் திட்டம் வகுக்க வேண்டியது மிகவும் அவசிய"மென்றார்.
தங்களது செயற்பாடு குறித்து தென்னாபிரிக்க கப்டன் ஸ்மித் திருப்தி தெரிவித்தார். "கடந்த 5 நாட்களாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பாக ஆடினார்கள். பந்து வீச்சாளர்களும் நன்றாக செயற்பட்டார்கள். உலகின் பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப பந்து வீச கற்று வருகிறார்கள். சேவாக் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆமதாபாத்திலும் அசத்த காத்திருக்கிறோம்" என்றார்.
அதிவேகமாக 300 ஓட்டங்களை விளாசி சாதனை படைத்த சேவாக் கூறுகையில்;
"தனிப்பட்ட முறையில் சிறந்த டெஸ்ட் போட்டியாக அமைந்தது. ஆனாலும் இந்தியா வெற்றி பெற முடியாதது ஏமாற்றமளித்தது. திட்டமிட்டு அதிரடியாக ஆடவில்லை. ஆடுகளம் ஒத்துழைத்ததால் நாள் முழுக்க ஆடுவதென்று முடிவு செய்தேன். ஜாபர், டிராவிட் அருமையாக `கம்பெனி' கொடுத்தனர். மூன்றாம் நாள் ஆட்டம் முடியும் தருவாயில் மிகவம் களைப்பாக இருக்க அடித்து விளையாட முற்பட்டேன். அப்போது டிராவிட் நிதானமாக ஆடினால் அடுத்த நாள் அதிகமாக ஓட்டம் எடுக்கலாம் என ஊக்கம் தந்ததாக"வும் தெரிவித்தார்.