இந்திய - தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு;
முதல் இனிங்ஸில் 319 ஓட்டங்களை எடுத்த செவாக், நேற்று முன்தினம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு போட்டியில் 300 ஓட்டங்கள்+2 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சகல துறைவீரர் வரிசையில் இரண்டாவது இடம்பெற்றார். இப்பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார். இவர், 1997 இல் கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 340 ஓட்டங்கள்+3 விக்கெட் கைப்பற்றினார்.
*சென்னை டெஸ்டில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தமாக 1498 ஓட்டங்கள் எடுத்துள்ளன. இது தான் இவ்விரு அணிகளும் மோதிய டெஸ்டில் எடுக்கப்பட்ட அதிகூடிய ஓட்டமாகும். முன்னதாக 1996 இல் கேப்டவுண் டெஸ்டில் இவ்விரு அணிகளும் சேர்ந்து 1288 ஓட்டங்கள் எடுத்திருந்தன. இது தான் சென்னையில் நடந்த டெஸ்ட் ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகூடிய ஓட்டமாகும். முன்னதாக 1986 இல் அவுஸ்திரேலியா, இந்திய அணிகள் மோதிய போட்டியில் 1488 ஓட்டங்கள் எடுக்கப்பட்டிருந்தது.
*முதல் டெஸ்டில் தென் ஆபிரிக்கா மொத்தமாக 871 (540+331) ஓட்டங்கள் எடுத்துள்ளன. இது தான் இந்தியாவுடனான டெஸ்டில் தென் ஆபிரிக்காவின் அதிக ஓட்டமாகும்.
*ஆடுகளம் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக இருக்க, இந்திய வேகங்கள் பந்துவீசி சோர்ந்து போயினர். இந்திய வீரர் ஆர்.பி. சிங் இரண்டு இனிங்ஸிலும் சேர்த்து 32 ஓவரில் 154 ஓட்டங்கள் கொடுத்தார். இதன்மூலம் முதன் முறையாக 150 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்து விக்கெட் வீழ்த்த முடியாமல் ஏமாற்றமடைந்தார்.
நேற்று முன்தினம் உணவு இடைவேளைக்கு பின்னர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கும்பிளே ஓய்வெடுக்க, பவிலியன் திரும்பினார். இதையடுத்து கப்டன் பொறுப்பை தோனி ஏற்றார். தனது காயம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என கும்பிளே தெரிவித்துள்ளார். "காயத்தின் தன்மை அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காகவே ஓய்வெடுத்தேன். ஆமதாபாத் போட்டியில் 100 சதவீத உடற்தகுதியுடன் பங்கேற்பேன்", என்றார்.
நேற்று முன்தினம் சதமடித்த மெக்கன்சி, சென்னையில் நடந்த டெஸ்ட் ஒன்றில் அதிக ஓட்டம் எடுத்த தென் ஆபிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர் இதில் மொத்தமாக 249 (94+155) ஓட்டங்களை எடுத்துள்ளார்.
சமீபத்திய அவுஸ்திரேலிய தொடர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போதைய தென் ஆபிரிக்க தொடர் சுமுகமாகத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஷ்ரீசாந்திடன் ஆக்ரோஷம் தவிர, வேறு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.