காயம் காரணமாக, ஆமதாபாத் டெஸ்ட் போட்டியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முகமது கைவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கள் ஓட்டம் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 97 ஆம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் முதல் முறையாக டக் அவுட்டானார்.
இந்த நிலையில் டெண்டுல்கர் காயத்தால் அவதிப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் நடந்த அவுஸ்திரேலிய தொடரின் போது இடுப்புப் பகுதியில் காயமடைந்த டெண்டுல்கருக்கு, இப்போது வலி அதிகமாகி பிரச்சினையாகி விட்டது. இதனால் சென்னை டெஸ்டின் கடைசி நாளில் அவர் களத்தடுப்பு செய்ய வரவில்லை.
காயத்தின் தன்மை அதிகமாகி விட்டதால், அவருக்கு ஓய்வளிப்பது அவசியமாகியுள்ளது. இதையடுத்து 3 ஆம் திகதி ஆமதாபாத்தில் தொடங்கும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இருந்து டெண்டுல்கர் நீக்கப்பட்டிருப்பதாக தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய சுற்றுப் பயணம் முடிந்த பின்னர் டெண்டுல்கருக்கு 2 வார காலம் ஓய்வளிக்க வேண்டுமென்று அப்போதைய உடல் தகுதி நிபுணர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெண்டுல்கருக்கு பதிலாக 27 வயதான முகமது கைவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2 ஆண்டு இடைவெளிக்குப் பின் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள கைவ், கடைசியாக 2006 ஆம் ஆண்டு மேற்கிந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார். இந்த சீசனில் 13 முதல் தரப்போட்டியில் விளையாடி 993 ஓட்டங்கள் குவித்திருக்கிறார். உள்ளூர் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவருக்கு தேசிய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக வெங்சர்க்கார் தொலைபேசி மூலம் கப்டன் கும்பிளேயுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெங்சர்க்கர் தெரிவித்தார்.
இதே போல், கப்டன் கும்பிளேயும் வலது இடுப்பு பகுதியில் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தான் முன் எச்சரிக்கையாக சென்னை டெஸ்டின் கடைசி நாளில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. கும்பிளே 2 ஆவது டெஸ்டில் விளையாடுவார் என்று அணியின் பிசியோதெரபிஸ்ட் பால் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது குறித்து இறுதி முடிவு போட்டிக்கு முந்தைய நாள் எடுக்கப்படுமென்றும் அவர் கூறினார்.