* சபையில் ஐ.தே.க, ஜே.வி.பி கடும் ஆட்சேபனை
சுற்றாடல் பராமரிப்பு சட்டமூலம் அவசரமாக சபையில் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானதெனவும் சட்டரீதியற்றதெனவும் ஐ.தே.க. வும் ஜே.வி.பி.யும் அரசாங்கத்தை மிகக் கடுமையாக குற்றம் சாட்டிய அதேவேளை, சூழல் பேணும் சட்டமூலத்தை மீண்டும் விவாதிக்க முடியாதெனவும் அது அரசியலமைப்புக்கு உட்பட்டதேயெனவும் ஆளும்தரப்பு வாதிட்டது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக உலகை ஏமாற்றி மாகாண அதிகாரங்களை அரசாங்கம் திருட்டுத்தனமாக அபகரிக்க முயல்வதாகவும் ஐ.தே.க. குற்றஞ்சாட்டியதுடன் சூழல் பேணும் சட்டமூலம் மனித கழிவுக்கும் வரி அறவிடும் அபாயத்தை ஏற்படுத்துமெனவும் ஜே.வி.பி. தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
அவர் கூறியதாவது;
சூழல் பேணும் சட்டமூலம் தூக்கி வீசப்பட வேண்டியதொன்றாகும். செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்தி இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. அரசியலமைப்புக்கு முரணானது. இச்சட்டமூலத்தை அமரர் ஜெயராஜ் கூட எதிர்த்தார். எனவே, சூழல் பேணும் சட்ட மூலத்தை மீண்டும் இச்சபைக்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டுமென்றார்.
இச்சமயம் குறுக்கிட்ட சபை முதல்வர் நிமல் சிறிபால டீ சில்வா சூழல் பேணும் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சட்டமூலத்தில் பிழைகள் இருந்திருந்தால் அதற்கெதிராக எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்றிருக்கலாம். இந்நிலையில், இச்சட்டமூலமும் அது நிறைவேற்றப்பட்ட விதமும் அரசியலமைப்புக்கு உட்பட்டதேயாகும். இதனை இச்சபையில் மீண்டும் விவாதிக்க முடியாதென்றார்.
இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி.சுனில் ஹந்து நெத்தி இச்சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால் மனித கழிவுக்கும் வரி அறவிடப்படும். இச்சட்டமூலம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் வாக்குறுதி வழங்கினார்.
சபாநாயகர் வாக்குறுதியில் எமக்கு நம்பிக்கையுள்ளது என்றார்.
லக்ஷ்மன் கிரியல்ல
இச்சமயம் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல சூழல் பேணும் சட்டமூலத்திற்கு இதுவரை மாகாண சபைகளின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. 13 ஆவது திருத்தம் குறித்து உலகத்தை ஏமாற்றும் அரசாங்கம் மறுபுறம் மாகாண சபைக்குரிய அதிகாரத்தை திருட்டுத்தனமாக அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எனவே, சூழல் பேணும் சட்டத்தை நாம் எதிர்க்கிறோம். இதனை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாதென்றார்.
இவ்வாறு ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் சூழல் பேணும் சட்டமூலம் தொடர்பில் பரஸ்பரம் சொற்போரிலும் சர்ச்சையில் ஈடுபடவே சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் பார்வையாளர் கலரியிலிருந்த பொதுமக்களும் இவற்றை வேடிக்கை பார்த்தனர்.
இந்நிலையில் சபையின் ஒழுங்கைப் பேண உதவுமாறு எம்.பி.க்களை அறிவுறுத்திய சபாநாயகர் சட்டமா அதிபரிடமிருந்து இச்சட்டமூலம் தொடர்பில் தனக்கு அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
எனினும் இங்கு இருதரப்பு எம்.பி.க்களும் தெரிவித்த கருத்துகளை கவனத்திற் கொண்டேன். கடந்த காலத்திலும் சபையில் குழப்பநிலை நீடித்தபோதும் சில சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இருந்தபோதும் இதுபற்றி ஆராய்வேன்.
அதேவேளை, சூழல் பேணும் சட்டமூலத்திற்கு சபாநாயகர் என்ற வகையில் நான் இதுவரை கையொப்பமிடவில்லை என்றார். எனவே, சட்டமூலம் தொடர்பில் எவரும் அச்சப்படத் தேவையில்லை. நான் கையொப்பமிட்டாலே அது சட்டமூலமாகும் என்றார்.
சபாநாயகரின் இக்கூற்றையடுத்து எம்.பி.க்கள் அமைதியடைந்ததுடன் சபை நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பின.