வட போர் முனையில் கடந்த ஒன்றரை வருட காலத்தில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னேற்ற முயற்சிகளையும் முறியடித்து எல்லைக்கோட்டில் ஒரு அங்குலத்தைக்கூட எதிரியிடம் விட்டுக்கொடுக்காது ஓர்மத்துடன் போராடி வருவதாக விடுதலைப்புலிகளின் வட போர் முனைக் கட்டளைத்தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார்.
வட போர் முனையில் நடந்த சண்டைகளில் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு போராளிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததாக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
கடந்த ஒன்றரை வருட காலத்தில் வடபோர் முனையில் எதிரியால் தொடுக்கப்பட்ட எல்லாவிதமான தாக்குதல்களையும் எதிர்கொணடு முறியடித்து நாங்கள் எங்களுடைய மண்ணிலே, இந்தப் பிரதேசத்திலே ஒரு அங்குலம் கூட எதிரியை நகர விடாது உறுதியோடு போராடி வருகின்றோம்.
வட போர் முனையிலே நாம் எதிரிக்கு மிகவும் சவாலாக நின்று கொண்டிக்கிறோம். எத்தகைய சவால்கள் வந்தாலும் அதை முறியடித்து எதிரிக்கு மிகப் பெரிய தாக்கத்தைக் கொடுப்போம் என்ற உறுதியுடன் நீங்கள் இந்தக் களத்தில் களமாடிக்கொண்டிருக்கிறீர்கள்.
இராணுவம் எமது தாயக நிலப்பரப்புகளை அபகரிப்பதற்காகப் பல களமுனைகளை திறந்து பேச்சளவில் முன்னேறுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் கள முனையிலே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அதே போன்று வவுனியா, மணலாறு வடபோர் முனைகளிளிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
எதிரி மிகப் பெரிய திட்டங்களை போட்டு எமது நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நாளுக்கு நாள் புதிய திட்டங்களை போட்டு நுழைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு கள முனைகளிலும் எதிரியை முன்னேற விடாது உங்களைப் போன்ற உங்களோடு இணைந்து கொண்ட போராளிகளே போராடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒவ்வொரு நாளும் சண்டை நடந்துக் கொண்டிருக்கிறது.
இன்று இராணுவம் என்ன செய்வதென்ற நிலையில் தனது நடவடிக்கையைச் செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் எதிர்ப்பார்த்தது "இங்கு புலிகள் இல்லை பூனைகளும் எலிகளும் தான் இருக்கிறது " குறுகிய காலத்தில் வன்னி நிலப்பரப்பை மீட்டு முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமென்றே நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
எங்களுடைய மண்ணை மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டுமென்று சொன்னால் நாங்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் அர்பணிப்புக்கள் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வீரனின் சாவுக்கு முன்னாலும் ஏகப்பட்ட எதிரிகள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று ஒரு பெயர் வைக்கப்படாத இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. "ஜெயசிக்குறு" என்று சொல்லப்படுகின்ற ஒரு பெரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையை 1997 ஆம் ஆண்டு நடாத்தி வன்னியைத் துண்டாடி யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப் பாதையைத் திறப்பதற்கான திட்டம் ஒன்றரை வருடம் நீடித்தது. பின் எமது தேசியத் தலைவரின் திட்டத்தால் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டன. அப்படியான வரலாற்றைப் படைத்தவர்கள் தான் விடுதலைப் புலிகள். அதே போன்ற நடவடிக்கையைத் தான் இன்று எதிரிகள் மன்னாரிலும் மேற்கொண்டுள்ளனர்.
ஜெயசிக்குறு போன்றே மன்னாரிலும் இராணுவம் சிக்குப்படத் தொடங்கியுள்ளது. இந்தக் காலம், இந்த நேரம், இந்தக் கணம், இனிவருகின்ற அந்தக் காலம், சிக்குப்பட்ட எதிரியை நாங்கள் வேகமாக நின்று வெல்ல வேண்டிய காலமாக இருக்கின்றது.
2006 ஆம் ஆண்டு சமாதானத்தை முறித்துக் கொண்டு சண்டையைத் தொடங்கினர். அதற்கு எதிராக நாங்கள் மிகக் கடுமையாகப் போரிட்டோம். போரிட்டுக் கொண்டே இருக்கிறோம். வெற்றிகள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதற்காக நாங்கள் உழைத்து கொண்டிருக்கிறோம். எனவே இனிவரும் காலங்கள் எங்களின் அர்ப்பணிப்பு நிறைந்த காலங்களாக இருக்க வேண்டியுள்ளது.
தரை வழியாக நகர்ந்து எங்கள் பாதுகாப்பு அரணை உடைத்து உள்நுழைய முடியாதவர்கள் இப்போது கவசப் படையணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆனால், எந்தப் படைக்கும் நாம் அஞ்சப் போவதில்லை ஏனென்றால் எங்களிடம் வீரம் இருக்கிறது. எங்களிடம் உறுதியிருக்கின்றது. நாங்கள் விடுதலைக்காகப் போராடும் வீரர்கள் எங்களுடைய மண்ணில் யாரையும் அனுமதிக்க மாட்டோம். அந்த உறுதி எங்களிடம் இருக்கின்றது என்றார்.