* உயிருக்கு அச்சுறுத்தலென சபையில் முறையீடு
வத்தளையிலுள்ள தனது வீட்டுக்குள் 8 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த முகத்தை மூடிமறைத்த ஆயுதபாணிகள் வீட்டின் பல இடங்களில் குழிகளை தோண்டி சோதனை நடத்தியதுடன் தேடுதல்களையும் நடத்தியுள்ளமையால் தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சிறப்புரிமைமீறல் பிரச்சினையை எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
கடந்த 8 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் வத்தளையிலுள்ள எனது வீட்டினுள் 5,6 ஆயுததாரிகள் தமது முகங்களை மூடி மறைத்தவாறு அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்த எனது வீட்டுப் பராமரிப்பாளரான ஜெயாஸ்பரன் அவர்களை யாரென விசாரித்தபோது அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று அறையொன்றினுள் வைத்து பூட்டிவிட்டு ஒரு ஆயுததாரியை காவலுக்கு நிறுத்தியுள்ளனர்.
இதன்பின்னர் எனது வீட்டின் வளவினுள் பல இடங்களில் குழிகளைத் தோண்டி தேடுதல்களை நடத்தியுள்ளனர். 20 நிமிடங்கள் வரை இந்த தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் முடிந்த பின்னர் எனது வீட்டுப் பராமரிப்பாளர் நீங்கள் யாரென மீண்டும் கேட்டபோது தாம் சி.ஐ.டி. யினர் எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அதிகாலை 3.48 மணியளவில் வந்த பொலிஸார் தோண்டியிருந்த குழிகளை பார்வையிட்ட பின்னர் வீட்டு பராமரிப்பாளர் ஜெயாஸ்பரனை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று வாக்குமூலங்களைப் பெற்றபின்னர் விடுவித்தனர்.
இந்நடவடிக்கையால் எனக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எமது கட்சி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோவென அச்சமடைகிறேன். வீட்டு வளவினுள் குழிகளை தோண்டியவர்கள் சிலவேளைகளில் குண்டுகளை புதைத்துவிட்டு சென்றிருக்கலாமெனவும் சந்தேகமடைகிறேன்.
இச்சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபருக்கும் பக்ஸ் மூலம் முறையிட்டுள்ளேன். அத்துடன், எனது வத்தளையிலுள்ள வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்புத் தர வேண்டுமெனவும் வேண்டுகிறேன்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், இச்சம்பவம் குறித்து நான் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். அவர் இது தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார் என்றார்.