*பதிலளிக்கத் தவறினால் மத்திய குழு முடிவெடுக்கும்; ஜே.வி.பி. தலைவர்
எம்.ஏ.எம்.நிலாம்
நிதிப் பரிமாற்றம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அவற்றுக்குப் பதிலளிக்காமல் கட்சியையும் பாராளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் தவறாக வழி நடத்த முற்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க இன்று வரை வீரவன்ச கட்சியிலிருந்து நீக்கப்படவோ, இடைநிறுத்தப்படவோ இல்லையெனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
வீரவன்ச மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க அவர் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்துக்கோ மத்திய குழுக் கூட்டத்துக்கோ சமுகமளிப்பதை தொடர்ந்து தவிர்த்துவருவதாக சுட்டிக்காட்டிய சோமவன்ச அமரசிங்க கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர் எத்தரத்தினரானாலும் அவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு கட்சி தயக்கம் காட்டமாட்டாதெனவும் தெரிவித்தார்.
தேசிய நூலகச் சேவைகள் கேட்போர்கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி.யின் செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே தலைவர் சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் தொடுத்த கேள்விகளுக்கு சோமவன்ச அமரசிங்க நீண்ட விளக்கங்களைக் கொடுத்தே பதிலளித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
ஜே.வி.பி. உடைந்துவிட்டதாகவும் பிளவுபட்டுவிட்டதாகவும் சில நாட்களாக ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன. கட்சியில் சிலரது நடவடிக்கைகள் கூட இதற்குத் துணை போயிருப்பதை தாம் மறுக்கவில்லை.
1971 முதல் இன்று வரை கட்சி பல்வேறு கட்டங்களிலும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டது. சில சந்தர்ப்பங்களில் கட்சி மிக மோசமாக பலவீனப்பட்டுப்போனதையும் தம்மால் மறந்துவிட முடியாது. முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசியல் சக்திகள் ஒருபுறம் ஜே.வி.பி.யை அழிக்கத் திட்டமிடும் போது மறுபுறத்தில் கட்சிக்குள் சில புல்லுருவிகளும் கட்சியை அழிக்கும் முயற்சிகளில் காலத்துக்குக் காலம் ஈடுபட்டுள்ளனர்.
இன்று கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிலர் ஜே.வி.பி.யை அழிப்பதற்காக சதித் திட்டம் தீட்டுகின்றனர். இச்சதித் திட்ட வலைக்குள் ஒருசிலர் மாட்டிக்கொண்டுள்ளனர். ஜே.வி.பி.யிலிருந்து எத்தனை பேர் வெளியேறினாலும் வெளியேற்றப்பட்டாலும் அக்கட்சியை அழித்தொழிக்க முடியாது. ஏனைய அரசியல் கட்சிகள் போன்று சிலர் போவதால் ஆட்டம் காணக்கூடிய கட்சியாக இக்கட்சி ஸ்தாபிக்கப்படவில்லை. ஜே.வி.பி. தனிநபர்களுக்கான கட்சியல்ல நாட்டின் பலம் பொருந்திய சக்தியாகவே ஜே.வி.பி. உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கையானது திட்டமிட்டு சோடிக்கப்பட்ட பொய் அறிக்கையாகும். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது போன்று விமல் வீரவன்ச மீது கட்சி இதுவரையில் எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் கட்சியிலிருந்தோ பதவிகளிலிருந்தோ நீக்கப்படவில்லை.
ஆனால், அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு பதிலளிக்கும் கடப்பாடு அவருக்கிருக்கின்றது. கட்சித் தலைவராக இருந்தாலும் என்மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அதற்கு நான் மத்திய குழுவுக்குப் பதிலளித்தே ஆகவேண்டும். மத்திய குழு எடுக்கும் முடிவைதான் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். கட்சியில் உயர்மட்டத்தினருக்கு ஒரு நீதியும் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு ஒரு நீதியும் கிடையாது. ஜே.வி.பி.யை பொறுத்தமட்டில் அனைவரும் சமமானவர்களாகவே நோக்கப்படுகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் சாமானியமானவையல்ல நிதிப் பரிமாற்றம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியமை உட்பட தொகையான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. சில முக்கிய குற்றச்சாட்டுக்களை நானே முன்வைத்திருக்கின்றேன். இவற்றுக்கு மத்திய குழுக் கூட்டத்துக்கு வந்து அவர் பதிலளிக்க வேண்டும்.
மார்ச் முதலாம் திகதியும் 7 ஆம் திகதியும் 11 ஆம் திகதியும் மத்திய குழுக் கூட்டங்கள் கூடின. அவர் அவற்றிலெதற்குமே சமுகமளிக்கவில்லை. இறுதியாக மார்ச் 18 ஆம் திகதி அவசியம் வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டது.தான் வரப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். ஆனாலும், நாம் இன்னமும் அவருக்குச் சந்தர்ப்பமளித்திருக்கின்றோம். கட்சியின் செயலாளர் அவருடன் பேசவிருக்கின்றார். அனைத்தையும் அவர் புறக்கணிப்பாரானால் மிகவிரைவில் கட்சியின் மத்திய குழு இறுதி முடிவொன்றை எடுக்க நேரிடலாம். அதனை எம்மால் தவிர்க்க முடியாது.
கட்சியிலிருந்து என்றோ வெளியேற்றப்பட்ட சேனாரத்ன சில்வாவுடன் சேர்ந்தே கட்சிக்கெதிரான சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. விமல் வீரவன்ச கூறுவது உண்மை. கட்சியில் சதி நடப்பதானது அவரைப் பின்னணியில் கொண்டதாகவே காணப்படுகின்றது.
கட்சியில் எவரும் அணி பிரிந்து செயற்பட முடியாது. வீரவன்ச இன்று தனி அணியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். கட்சிக்கட்டுப்பாட்டை மீறி ஜே.வி.பி. எம்.பி.க்கள் 10 பேர் ஊடகவியலாளர் மாநாடு நடத்தியது தவறு. அவர்கள் மீதும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்.
மத்திய குழுவின் பெரும்பான்மைத் தீர்ப்புக்கு தலை சாய்க்க வேண்டும். அதனை மீற எவருக்கும் உரிமை கிடையாது. விமல் வீரவன்ச முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையுமில்லை. தனது தவறுகளை மறைப்பதற்காக அவர் பாராளுமன்றத்தில் பொய் கூறியுள்ளார்.
நாம் இறுதியாகக் கூறுவது விமல் வீரவன்சவுக்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் கூறி தன்னை நிரபராதி என அவர் நிரூபிப்பாரானால் பிரச்சினை அத்துடன் முடிந்துவிடும். ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறைச் செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எவ்வாறாயினும் விமல் வீரவன்ச மற்றும் 10 எம்.பி.க்கள் தொடர்பிலான மத்திய குழுவின் தீர்மானம் கூடிய விரைவில் வெளிவரும். எதிர்பாராத நேரத்தில் நாம் அதனை வெளியிடுவோம் எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜித ஹேரத், லால்காந்த, சந்திரசேன விஜேசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.