* மடு, கோணேஸ்வரம், கேதீஸ்வரம் பௌத்தர்களின் புனிதப் பிரதேசங்கள்
மடு தேவாலயம், திருக்கோணேஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலயங்கள் பௌத்தர்களின் புனித பிரதேசங்களென தொல்பொருள் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த ஹெல உறுமய எம்.பி. எல்லாவல மேதானந்த தேரர், இராணுவ நடவடிக்கையின்போது ஆலயங்களும் தேவாலயங்களும் சேதமாக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாதெனவும் இதனை பொருட்படுத்த தேவையில்லையெனவும் மேலும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டப்பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றய அவர் மேலும் தெரிவித்ததாவது;
"ஜெயராஜின் படுகொலை பாராளுமன்றத்தை சோபையிழக்கச் செய்துள்ளது. எனினும் பிரபாகரனின் குண்டுகளினால் இப்பாராளுமன்றத்தை மௌனமாக்கிவிட முடியாது. அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஜெயராஜ் வெலிவேரியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இப்பிரதேசத்தில் வசித்தவரே இராணுவத் தளபதி மீதும் தாக்குதல் மேற்கொண்டார். எனவே, அரசாங்கம் வெலிவேரிய பிரதேசம் மீது கூடிய அவதானம் செலுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் இன்று வரலாற்றை திரிபுபடுத்துகின்றனர். திருமலை கோணேஸ்வரர் ஆலயம், மாந்தை திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியன பௌத்த விகாரைகளை இடித்தே கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் சான்று பகிர்கின்றன.
இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் பூர்வீகப் பிரதேசங்கள் ஏனைய சமூகங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தன் போன்ற எம்.பி.க்கள் வரலாற்றை திரிபுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது. இதனை நாம் கண்டிக்கிறோம்.
இன்று சிலர் மதங்களுக்கிடையே யுத்தத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இதில் எவரும் சிக்கிவிடக்கூடாது.
மடு தேவாலயத்தை புலிகள் அழித்துவிட்டு பழியை இராணுவத்தினர் மீது போட நடவடிக்கை மேற்கொண்டனர்.இது பலனளிக்காத நிலையிலேயே, அங்குள்ள சொரூபத்தை புலிகளின் பிரதேசத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் மன்னார் ஆயர் தவறிழைத்துள்ளார். இது கண்டிக்கப்பட வேண்டியது.
மடு தேவாலயம் கூட பௌத்தர்களுக்கு சொந்தமானதேயாகும். தேவாலயத்தில் புனித பௌத்த சின்னங்கள் காணப்பட்டதை தொல்பொருள் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
தேசத்தை பாதுகாத்து, பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இராணுவ நடவடிக்கையின்போது இந்துக் கோயில்களோ கிறிஸ்தவ ஆலயமோ சேதமாகுவது தவிர்க்கமுடியாதது. இதனை பொருட்படுத்தத் தேவையில்லை".