அரச படையினர் மடு தேவாலயப் பகுதியைக் கைப்பற்றினால் நாம் மதவாச்சிக்கு வருவோம். இது றவுண்ட் வரும் யுத்தமாகும் என புலிகள் இயக்க அறிவிப்பாளர் இராசையா இளந்திரையன் கடந்தவாரம் கூறியிருந்தார். இவருடைய அறிவிப்பை நாம் ஒரேயடியாக ஒதுக்கிவிடமுடியாது என்று பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. வில்பத்து காட்டுப்பகுதியின் எல்லைக்கிராமமாகிய நொச்சியாகம எல்லையில் இரண்டு கிராமவாசிகளை புலிகள் இயக்கத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இது சம்பந்தமாக இராணுவமும் பொலிஸ் தரப்பினரும் தேடுதல் மேற்கொண்டபோதும் பலன்கிடைக்கவில்லை
புலிகள் இயக்கம் அநுராதபுரம் விமானப் படைமுகாம் மீது எல்லாளன் எனப்படும் தற்கொலைப்படைக் குழுவினர் தாக்குதலை மேற்கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்னரும் வில்பத்து வனப்பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் சூட்டுக்கொலைகள், காணாமல் போதல்கள் போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்ததை நாம் மறக்கக்கூடாது. இதிலிருந்து புலிகள் வில்பத்து காட்டுக்குள் நுழைந்துள்ளது பற்றி உறுதியாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், வில்பத்து சார்ந்த பாதுகாப்புப் பிரிவினர் இதுபற்றி அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லை போலவே தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் வில்பத்து வனப் பிரதேசத்தின் எல்லைகளாக புத்தளம், அநுராதபுரம், வன்னி ஆகிய பிரதேசங்கள் உள்ளன. புத்தளம் இராணுவத் தலைமையகம் வில்பத்து சார்ந்த புத்தளம் எல்லைப் பகுதியைக் கவனித்துக்கொள்கிறது. அவ்வாறே அநுராதபுரத்தில் கூட்டுத் தலைமையகமும் வன்னித் தலைமையகமும், கஜசிங்கபுர பகுதியில் 21 ஆவது இராணுவ படையணித் தலைமையகமும் உள்ளன. இந்த தலைமையகங்கள் எல்லாம் வில்பத்து எல்லைப் பாதுகாப்பு சம்பந்தமாக ஒன்றையொன்று பொறுப்பைச் சுமத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் ஆபத்தான நிலைமை ஆகும். இந்த தலைமையகங்கள் ஒன்றுசேர்ந்து வில்பத்து பாதுகாப்பு சம்பந்தமாக முறையான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் புலிகள் இயக்கத் தலைவர் "இரண்டாவது எல்லாளன்" என்று தன்னை எமக்கு காட்டிக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.