தன்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதாக அக்தர் கூறியதால் அது பற்றி ஐ.சி.சி.ஊழல் தடுப்பு பிரிவு குழுவினர் பாகிஸ்தானில் இரகசிய விசாரணை நடத்தினார்கள். இதனால் அக்தருக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் தனக்கு 5 ஆண்டு விளையாடத் தடை விதிக்கப்பட்டதும் ரகசியம் ஒன்றை வெளியிட்டார். இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதாக திடுக்கிடும் தகவலை ரி.வி. ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
ஜொகனஸ் பேர்க்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது ஒரு சூட்கேஸ் நிறைய பணம் கொடுக்க சூதாட்டக்காரர்கள் முன் வந்தனர். நான் மறுத்துவிட்டேன். பின்னர் இந்தியா சென்ற போதும் மீண்டும் பணம் கொடுக்க முயன்றனர். அப்போதும் மறுத்து விட்டேன். நாட்டுக்கு ஒரு போதும் துரோகம் செய்யமாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன்' என்று அந்த பேட்டியில் அக்தர் கூறினார். இரண்டு சம்பவங்களும் எந்தத் திகதிகளில் நடந்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
அனுதாபம் பெறுவதற்காக அவர் கூறிய தகவல் இப்போது அவருக்கு வினையாக முடிந்திருக்கிறது. அதாவது கிரிக்கெட் விதிப்படி, இது போன்ற யாராவது ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட அணுகினால் உடனடியாக அணிக் கப்டன், முகாமையாளர் மற்றும் தங்களது கிரிக்கட் அல்லது சர்வதேச கிரிக்கெட் சபையின்(ஐ.சி.சி.)ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரியப்படுத்திவிட வேண்டும்.
ஆனால் அக்தர் இது பற்றி யாரிடமும் வாய் திறக்கவில்லை. இந்த விதியை மீறியதற்காக அக்தருக்கு ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட ஐ.சி.சி. விதியில் இடமுள்ளது.
இந்நிலையில் அக்தர் கூறிய குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா என்பதை அறிய அலன் பீகாக், நூருதீன் காவாஜா ஆகியோரைக் கொண்ட ஐ.சி.சி. ஊழல் தடுப்புக் குழு பாகிஸ்தானில் முகாமிட்டு ரகசிய விசாரணையை மேற்கொண்டிருக்கிறது.
இவர்கள் இந்தியத் தொடரின் போது துணை கப்டனாகவும், தற்காலிகக் கப்டனாகவும் செயல்பட்ட யூனிஸ்கான் மற்றும் உமர் குல் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்தர் மற்றும் சில வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக மற்றொரு தகவல் கூறுகிறது. இந்தக் குழு செய்யும் பரிந்துரைப்படி ஐ.சி.சி. அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். ஏற்கனவே 5 ஆண்டு தடையை நீக்கப் போராடி வரும் அக்தருக்கு இது கூடுதல் தலைவலியாக அமைந்திருக்கிறது.