இராணுவ நடவடிக்கைகளின் போது ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாத விடயமெனவும் இதனைப் பொருட்படுத்தத் தேவையில்லையெனவும் ஜாதிக ஹெல உறுமய எம்.பி.யான எல்லாவல மேதானந்த தேரர் நேற்று முன்தினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருப்பதுடன் இலங்கையிலுள்ள பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் என்பன பௌத்தர்களுக்கு சொந்தமான இடங்களெனவும் பௌத்த விகாரைகளை அழித்தே இந்த ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இந்நாட்டிலுள்ள தமிழர்கள் வரலாற்றை திரிவுபடுத்த முற்படுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். லௌகிக வாழ்வை வெறுத்து `நிலையாமை' குறித்த பட்டறிவுடன் பற்றுகளை நீக்கி துறவறம் பூண்டுள்ள எல்லாவல மேதானந்த தேரர் அரசியல் கட்சியொன்றில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினராகி மக்களுக்கு சேவையாற்றுகின்றமை தொடர்பாக எந்தவொரு அபிப்பிராய பேதமும் இல்லை.
ஆனால், போரை வெறுத்து சமாதானக்கோட்பாடுகளை போதிக்கும் பௌத்த மதத்தைச் சேர்ந்த துறவியொருவர் இராணுவ நடவடிக்கைகளை வரவேற்பதுடன் மட்டும் நின்றுவிடாது பிறமதங்களைச் சேர்ந்த ஆலயங்களை இடித்தழிப்பது தவிர்க்கப்படமுடியாததொன்று என்று கூறுவதும் வரலாற்றுக்காலம் தொட்டு இருந்துவரும் ஆலயங்கள், தேவாலயங்களை தான் சார்ந்த மதத்தினரின் உடைமைகளென உரிமை கொண்டாடுவதும் யாவற்றிலும் மேலாக வரலாற்றை திரிவுபடுத்தி மக்கள் மனங்களை தவறான சிந்தனைக்கு இட்டுச்செல்வதும் தார்மீக சிந்தனையுடைய மதக் கோட்பாட்டை வரித்துக் கொண்ட ஒரு துறவிக்கு உரிய இலட்சணமா என்பதே எம்முன்னால் எழுந்திருக்கும் கேள்வியாகும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து சென்னை வரையிலான (இவை தற்போதைய இடங்களின் பெயர்கள்) கி.மு. 264 இல் அதாவது இற்றைக்கு 2272 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட மௌரியப் பேரரசன் அசோகன் கி.பி. 255 இல் கலிங்கம் மீது படையெடுத்து வெற்றிகொண்டதும் யுத்தத்தின் குரூரத்தன்மையைக் கண்டு அதனை வெறுத்து ஒதுக்கியதும் பௌத்தத்தின் சாத்வீகக் கோட்பாடுகளை வரித்துக் கொண்டதும் அதன் பின்னரான தனது ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுவதும் கிணறுகளை தோண்டுவித்தும் நிழல்தரும் மரங்களை நாட்டியும் மருத்துவமனைகள், ஆதுலர்சாலைகளை நிர்மாணித்தும் மூலிகைத்தோட்டங்களை அமைத்தும் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்தும் பாரதத்திலுள்ள பழங்குடிகள், ஏனைய இனக்குழுக்களின் நலன்களை பேணிப்பராமரிக்க தனியான அமைச்சை உருவாக்கியதும் ஊழல், மோசடிகள், மேலாதிக்கவாதம் என்பனவற்றை இல்லாதொழிப்பதற்கான நற்போதனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்றமையும் வரலாற்று ரீதியாக ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உன்னதமான விடயங்களாகும்.
இவற்றுடன் மட்டும் மாமன்னன் அசோகன் நின்றுவிடாது பௌத்த மதக் கொள்கைகளை அண்டைய நாடுகளுக்கும் தூதுக்குழுக்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தான். காஷ்மீர், பாரசீகம் (ஈரான்), இலங்கை, அலெக்சாண்டிரியா போன்ற நாடுகளுக்கு பௌத்த துறவிகளடங்கி தூதுக்குழுக்கள் சென்றன.
இலங்கைக்கு தனது மகனான மகிந்த தேரரையும் மகளான சங்கமித்தையையும் அசோகன் அனுப்பி வைத்ததாகவும் அச்சமயம் ஆட்சியிலிருந்த தேவநம்பியதீசன் பௌத்த மதத்தை தழுவியதும் அதன்பின் இலங்கையில் பௌத்தம் பெரும்பான்மையினரின் மதமாக வளர்ச்சிகண்டதும் வரலாற்றுத் தகவல்கள். இது தொடர்பாக நாம் மாற்றுக் கருத்தை தெரிவிக்கவில்லை.
ஆனால் பௌத்தமதம் இலங்கையில் வேரூன்றி வளர்ச்சி கண்டது போல இந்து மதமும் ஏனைய மதங்களும் காலத்துக்காலம் மக்களால் தமது சமயங்களாக வகுத்துக் கொள்ளப்பட்டு இலங்கைத் தீவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற போதும் அவற்றை இரண்டாம் பட்சமானவை என்ற தொனியிலும் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டவை என்ற கண்ணோட்டத்திலும் கருத்துகளை பரப்பி வருவதே வெறுக்கத்தக்க விடயமாகும்.
தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் பல்கிப் பெருகிய பக்தி இலக்கியங்களில் (கி.பி 6-9 ஆம் நூற்றாண்டு) திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வர ஆலயங்கள் மீது பதிகங்கள் பாடப்பெற்றிருந்தமை வரலாற்று ரீதியான ஆதாரங்களாகும்.
`மாதுமையாளோடு கோணேஸ்வரத்தானை' சம்பந்தரும் மாதோட்ட நன்னகரில் பாலாவியின் கரை மீது குடிகொண்டிருக்கும் கேதீஸ்வரத்தானை சுந்தரரும் பாடித்துதித்திருந்தமை சுமார் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னர் என்பதை மேதானந்த தேரர் அறிந்திருக்கவில்லைப் போலும்.
யாவற்றுக்கும் மேலாக மடுமாதா தேவாலயமும் பௌத்தர்களின் விகாரையிருந்த இடமென தேரர் உரிமை கொண்டாடியிருக்கிறார். சுமார் 400 வருடங்களுக்கு மேலாக மடுமாதா ஆலயம் தமிழ், சிங்கள சமூகங்களைச் சார்ந்த கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமாக இருந்து வரும் நிலையில் அது பௌத்தர்களின் இடமென உரிமை கொண்டாடத் தலைப்படும் இத்தேரரின் `பரந்த மனப்பான்மையின் தாற்பரியம்' தான் என்னவென்பது.
மதங்கள் வேறுபட்டவையாக இருந்தாலும் அவற்றின் உட்பொருளும் குறிக்கோளும் ஒன்று என்பர் ஞானிகள். ஆகவே, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தத்தமது மத, சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை உடையவர்கள் என்பது மனிதாபிமானக் கோட்பாடு என்பது மாத்திரமல்லாமல் இலங்கையின் அரசியலமைப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் ஒன்று என்பதையும் எது முந்தி வந்தது. எது பின்தோன்றியது என்று நதிமூலம் , ரிஷிமூலம் பார்த்துக் கொண்டிருக்காமல் மக்கள் மத்தியில் மத சகிப்புத்தன்மை, பரிவிரக்கம் , அன்பு என்பவற்றை போதிப்பதே மதத்துறவியொருவருக்குரிய கடமை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மாறாக ஆலயங்களை அழிப்பது தவிர்கப்பட முடியாதது என்ற ரீதியில் போர்முன்னெடுப்புகளுக்கும் பேரினவாதக் கொள்கைகளுக்கும் உற்சாகம் அளிக்கும் விதத்திலான அறிக்கைகளும் கருத்துகளும் மனித குலத்திற்கு பேரழிவையே ஏற்படுத்தும் என்பதை எல்லாவல மேதானந்த தேரர் போன்ற துறவிகள் அறிந்து கொள்ளாமலிருக்க வாய்ப்பில்லை என்பதே எமது உறுதியான நம்பிக்கை.