* எதிர்க்கட்சியினரின் கோரிக்கை நிராகரிப்பு
சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்துள்ளார்.
திபெத் மீது சீனா அடக்குமுறையைக் கையாள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழாவில் புஷ் கலந்துகொள்ளக் கூடாதென செனட்டர் ஹிலாரி கிளின்டன் உட்பட ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்தே புஷ் இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சீனா ஆக்கிரமித்து உள்ள திபெத் மாநிலத்தில் இருந்து அதுவெளியேற வேண்டும் என்றும், திபெத்துக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி திபெத்தியர்கள் உலகம் முழுவதும் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சீனாவில் நடந்த போராட்டத்தை அந்த நாட்டு அரசும் இராணுவமும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. இதற்கு உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றன.
ஜேர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை புறக்கணித்து இருக்கிறார்கள். அதன்படி அமெரிக்காவும் தொடக்கவிழாவை புறக்கணிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ள ஹிலாரி கிளின்டன் மற்றும் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி புஷ்ஷும் இந்த தொடக்க விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி உள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி புஷ், சீனாவில் வருகிற ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் நிச்சயம் தான் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
திபெத் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதும், ஜனாதிபதியின் கருத்து என்ன என்பதும் தெள்ளத்தெளிவானது. இதை வலியுறுத்துவதற்காக நாம் தொடக்க விழாவை புறக்கணிக்க வேண்டிய தேவை இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டோனி பிராட்டோ தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;
சீனாவில் மனித உரிமை மீறப்படுவது தொடர்பில் நாங்கள் மிகுந்த கவலை கொண்டு உள்ளோம். பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவை சீனாவில் இல்லை என்பதை ஜனாதிபதியும், அவரது ஆலோசகர்களும் சீனாவிடம் எடுத்துக்கூற ஒருபோதும் தயங்கியதில்லை. எனவே, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதில் அமெரிக்க வீரர்கள் பங்குகொண்டு வெற்றிபெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஒலிம்பிக் தீபம் கிரேக்கத்திலிருந்து கடந்த வாரம் புறப்பட்டது. அது 21 நாடுகள் வழியாக 85 ஆயிரம் மைல்கள் பயணம் செய்ய இருக்கிறது. அதற்கு பிரான்ஸ் நாட்டில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஒலிம்பிக் தீபத்துக்கான எதிர்ப்பு அமெரிக்காவிலும் அங்கு உள்ள திபெத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
சான்பிரான்சிஸ்கோ நகர் வழியாக தீபம் சென்றபோது சீனா அரசை கண்டிக்கும் வகையில் 3 திபெத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோல்டன் கேட் பாலத்தின் மீது ஏறி "ஒரே உலகம், ஒரே கனவு சுதந்திர திபெத்" என்று எழுதப்பட்ட பாரிய பதாகையை தொங்கவிட்டனர். தீபம் சென்ற வழியாக சென்ற திபெத்தியர் ஒருவர் திபெத் கொடியை தாங்கிச் சென்றார்.