பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தனக்கெதிரான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிகமிருப்பதால் அங்கு உரையாற்றுவதை அந்நாட்டு ஜனாதிபதி பேர்வேஷ் முஷாரப் தவிர்த்து வருகிறார்.
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு தேர்தல் முடிந்தபிறகு, சபைத் தலைவர், பிரதமர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். பாராளுமன்றத்தின் வழக்கமான கூட்டத் தொடர் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கவிருந்தது.
பாராம்பரிய முறைப்படி முதல் கூட்டத்தொடரின் முதல் நாள், பாராளுமன்ற தேசியப் பேரவை மற்றும் செனட் சபை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தை முஷாரப் கூட்டவில்லை. மாறாக இரு சபைகளும் தனித்தனியே அலுவல்களைக் கவனிக்க ஆரம்பிக்கும்.
கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினால், தாம் உரையாற்ற வேண்டியிருக்கும்; எதிரணியைச் சேர்ந்தவர்கள் நிறைந்த சபையில், தம்முடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது என்று எண்ணியே ஜனாதிபதி முஷாரப் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை எனத் தெரிகிறது.
கடந்தமுறை பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு தமக்கு ஆதரவான கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்ததால், பாராளுமன்றக் கூட்டத் தொடக்க நாளில் முஷாரப் உரையாற்றினார்.
ஆனால், தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைமையில் அங்கு கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை பற்றி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்றுதொழிலாளர் துறை அமைச்சர் குர்ஷித் ஷா கூறினார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட 60 நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி நிறுவனர் சுல்பிகர் அலி பூட்டோ இராணுவப் புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டு, 1979 ஆம் ஆண்டு தூக்கில் போடப்பட்டார். இதன் மூலம் பாகிஸ்தானில் நீதி புதைக்கப்பட்டது. இதற்காக மன்னிப்பு கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சரும் தலைமைக் கொரடாவுமான குர்ஷித் ஷா கூறினார்.