* ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் ஜிந்தாவோ தெரிவிப்புபயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியான ஆதரவளிக்குமென அந்நாட்டு ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் ஹேய்னான் மாகாணத்திலுள்ள யா லொவ் குடா விடுதியில் இரு நாட்டுத் தலைவர்களும் நேற்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
ஆசியாவுக்கான பிஓஏ மாநாட்டுக்காக சீனா சென்றிருக்கும் ஜனாதிபதிக்கும் சீனத் தலைவருக்கும் இடையில் கடந்த 14 மாதங்களில் இரண்டாவது சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது நுரைச்சோலை அனல்மின் உலை, அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பில் கலையரங்கு என்பவற்றுக்கான திட்டங்களுக்கு சீனா அளித்து வரும் உதவிகள் குறித்து இருதலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, `ஒரே சீனக் கொள்கை'க்கு இலங்கை தொடர்ந்து ஆதரவு வழங்குவதையிட்டு சீன ஜனாதிபதி ஜிந்தாவோ இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளதுடன், திபெத் தொடர்பான துரதிர்ஷ்ட வசமான சம்பவங்களையிட்டும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு விளக்கிக் கூறியிருக்கிறார்.
அதேசமயம் சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக இடம்பெற வேண்டுமென ஜனாதிபதி ராஜபக்ஷ வாழ்த்தியதுடன், சர்வதேச விளையாட்டு நிகழ்வை நடத்துவதையிட்டு இலங்கை பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேசமயம் இவ்வருட பிற்பகுதியில் இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டிற்கு அவதானிப்பாளராக உயர்மட்டத் தூதுக் குழுவொன்றையும் சீனா அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி ஜிந்தாவோ கூறியுள்ளார்.