* சுட்டிக்காட்டுகிறது ஐ.தே.க.
ரொஷான் நாகலிங்கம்
அரசாங்கம் சட்டத்தினை மதிக்காது செயற்படுவதனால் சட்டத்தின் தீர்ப்புக்காக காத்திருக்காது தாமே சட்டத்தினை கையிலெடுக்கும் நிலைக்குள் மக்களை அரசாங்கம் தள்ளியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
அரசியலமைப்புக்கு எதிராக அரசாங்கம் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துல்கொடவை நியமித்துள்ளது. இந்த நியமனத்தை ஐ.தே.க. எதிர்க்கின்றதே தவிர அவருடன் தனிப்பட்ட முறையில் எந்த முரண்பாடும் கட்சிக்கு இல்லை.
அரசியலமைப்பு மூலம் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டு அதன் மூலம் அவர் நியமிக்கப்பட்டால் நாம் அதனை எதிர்க்கப் போவதில்லை. சட்டத்தை மீறுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லையென ஜனாதிபதி முன்னர் கூறியிருந்த நிலையில் நாட்டில் நாளுக்கு நாள் சட்டம் மீறப்பட்டு அதன் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர்.
இதன் காரணமாக பஸ் விபத்துக்குள்ளாகும்போது அதனை எரிப்பதற்கு மக்கள் முற்படுகின்றனர். ஏனெனில் மக்கள் சட்டத்துக்காக காத்திருக்காது தாமே சட்டத்தை கையிலெடுக்கின்றனர். இதற்கு அரசாங்கத்தின் அமைச்சர் மட்டம் முதல் பிரதேச மாகாண சபை வரை சட்டம் மீறப்படுவதே காரணமாகும்.
அமைச்சர் மேர்வின் ரூபவாஹினிக்குள் மேற்கொண்ட நடவடிக்கையில் சட்டம் எவ்வாறு பங்கெடுத்தது என்பது உங்களுக்குத் தெரியும். அதன் ஊழியர்கள் வீதிக்கு இறங்கி தமது பாதுகாப்பிற்கு போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஊடகங்களுக்கு எழுத சுதந்திரமில்லை. மக்களுக்குப் பேசுவது முதல் அனைத்து சுதந்திரமும் இல்லாமல் போயுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மேற்படி பதவிக்கு தம்மிக்க கித்துல்கொடவை நியமித்தபோது அப்போதிருந்த சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா எதிர்த்தார். ஏனெனில் சட்டத்துக்கு முரண் என்ற காரணத்திலாகும்.
இந்த நியமனம் குறித்து அரசியலமைப்பின் 41 ஆவது சரத்து தெளிவாக குறிப்பிடுகின்ற நிலையில் மேற்படி நியமனம் தொடர்பில் சபாநாயகர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். எமது ஆட்சியின் போதே 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஏனெனில் சட்ட மீறுதலை தடுப்பதற்காக சுயாதீன குழுக்களை அமைப்பதற்கே இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அரசாங்கம் 17 ஆவது அரசியலமைப்பை கொண்டு வராது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முற்படுகின்றது. இது தொடர்பிலான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் ஏன் தவிர்க்கின்றது என நாம் கேட்கின்றோம்.
சட்டத்துக்குப் புறம்பாக மனித உரிமை சபை உட்பட பல சுயாதீன குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஏன் அரசியலமைப்புச் சபையை அரசாங்கம் கொண்டுவர தயங்குகின்றதென நாம் கேட்கிறோம்.
நாட்டில் சட்டம் மீறப்படக்கூடாது எனக் கூறிய எல்லே குணவன்ச தேரர் இப்போது பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயற்படுகின்றார் அவருக்கு தனது நியமனம் சட்டத்துக்கு முரணென தெரியாதாவென நாம் கேட்கின்றோம் இவ்வாறானவர்கள் இந்த ஆணைக்குழுவில் இருந்தால் அதன் செயற்பாடு எவ்வாறு நியாய பூர்வமாகவிருக்கும்?
ஐ.தே.கட்சியின் வாக்குகளைப் பெற்று தற்போது அமைச்சராகவுள்ள ஜீ.எல்.பீரிஸ் எமது கட்சித் தலைவர் வெளிநாடு சென்று சேறுபூசுவதாகக் கூறுகின்றார்.
ஜி.எஸ்.பி.+ என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிமை வரிச்சலுகை ரத்தாகும் நிலைமையில் உள்ளமைக்கு எமது பிரசாரம் காரணமல்ல. அது நாட்டில் இடம்பெறும் நீதிக்குப் புறம்பான படுகொலை, கடத்தல், கப்பம் போன்ற மனித உரிமை மீறல்களை அடிப்படையாக வைத்தே இதனை ஐரோப்பிய ஒன்றியம் ரத்துச் செய்கின்றது.
நாட்டில் மனிதஉரிமை நிலை எவ்வாறுள்ளது என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. உண்மையில் இதனை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்துவதால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பதுடன் ஏற்படப்போகும் விளைவினை எடுத்துரைத்து அதனை மேற்கொள்ள வேண்டாமெனக் கூறியுள்ளோம்.
முதலில் அரசு மனித உரிமையை பாதுகாக்கட்டும். இந்த அரசில் மனித உரிமை மட்டுமல்லாது ஊழல் மோசடியும் அதிகளவில் இடம்பெறுகின்றது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடு பெற்ற பெருந் தொகைக் கடனுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார்.
சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துல்கொடவின் நியமனம் 14 நாட்களுக்கு தற்காலிகமானதெனக் கூறியுள்ளார். எனினும் அவரை நிரந்தரமாக அப்பதவிக்கு நியமித்தால் சபாநாயகர் பதிலளிக்க வேண்டுமெனக் கோருகின்றோமென ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் ஜயசேகர தெரிவித்தார்.