உலகின் பல வல்லரசுகளால் ஒழுங்குபடுத்தப்பட்டும் பெரும் ஆயுதங்களை பெற்றுக்குவித்தும் போர் ஒத்திகைகள் மற்றும் புதிய நுட்பங்கள் என்றெல்லாம் தயார்படுத்தியும் களமிறங்கிய இராணுவம் ஓராண்டு காலமாக மன்னாரில் திணறிக்கொண்டிருக்கின்றது என்று விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் கலந்துகொண்டு சமகால நிலைமைகள் தொடர்பாகப் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
விடுதலைப் போராட்டம் பலம் பொருந்திய நிலையில் இன்று வந்திருக்கின்றது. எமது போராளிகள் பெருந்தொகையான படைகளுடன் மோதிக்கொண்டிருக்கின்றனர். போர் என்றால் மிகச் சாதாரணமானதல்ல. தனியே வெற்றிகள் தான் போரல்ல. அந்த வெற்றிகளுக்கான ஒழுங்குபடுத்தல்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த ஒழுங்குபடுத்தல்கள் சரியான முறையில் நிறைவடைந்தால் வெற்றிச் செய்திகள் எமது காதுகளை நிறைக்கும்.
மன்னார் முதல் மணலாறு வரைக்கும் கிளாலியில் இருந்து நாகர்கோவில் வரைக்கும் 350 கிலோ மீற்றருக்கும் அதிகமான நீளத்தைக்கொண்ட எல்லைகளில் படைகளை எதிர்கொண்டு போரிட்டு வருகின்றோம். இந்த எல்லைக்குள் வலிந்து இழுக்கப்பட்ட படையினருடன் நாளாந்தம் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தச் சண்டைகளில் படைகள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. நாமும் சில இழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். போர் என்றால் இழப்புகளைச் சந்தித்தேதான் ஆகவேண்டும். தொடர்ச்சியான பெரும் போருக்குள் நாம் நிற்கின்றோம்.
எதிரிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றுவதுதான் போரல்ல. மூர்க்கமாக முன்நகரும் படையினரை எல்லைகளில் அசையாமல் தடுத்து வைத்திருக்கின்றனரே உங்கள் பிள்ளைகள் அது மிகப்பெரும் பணி. இலங்கை அரசின் 75 வீதமான படையினர் இன்று இந்த எல்லைப் பிரதேசங்களிற்குள் முடங்கியிருக்கின்றனர். இந்த 75,000 படைகளையும் தடுத்து நிறுத்தி வைத்து அவர்களுக்கு நாளாந்தம் பெரும் இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர் போராளிகள்.
கடந்த மாதம் மட்டும் இந்த எல்லைகளில் 143 படைகள் கொல்லப்பட்டும் 840 படையினர் காயமடைந்துமிருக்கின்றனர் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டிருக்கிறது. ஒரு மாதத்தில் 1,000 படையினர் கள முனைகளில் உயிரிழந்தும் காயமடைந்தும் அகற்றப்படுகின்றனர். நாளுக்கு நாள் படைகளின் இழப்புகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இவ்வளவு பெருந்தொகையான படையினரை எல்லைகளில் முடக்கி வைத்திருப்பது என்பது மிகவும் சாதாரணமான விடயமல்ல. இந்தப் படை முடக்கம் என்பது எமது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மிகவும் முக்கியமானது. மன்னாரைப் பிடித்து விடுகின்றோம் என்று தமது விரல்களை மடித்து நாட்களை எண்ணியது இலங்கைப் படைத்துறை. ஒரு வாரம் போதும் என்றனர். பின்னர் 100 நாட்களில் பிடிக்கின்றோம் என்று கற்பனை உலகில் மிதந்தனர். இன்று ஒருவருடம் கடந்துபோய்விட்டது. இன்றும் மன்னாரில் திணறிக்கொண்டிருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.