* கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
கட்டானையிலிருந்து எம்.ஏ.எம்.நிலாம்
குண்டுவெடிப்பில் பலியான அரசாங்கக் கட்சி பிரதம கொரடாவும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜெயராஜின் பூதவுடல் கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பூரண அரச மரியாதைகளுடன் நேற்று வியாழக்கிழமை மாலை கட்டானை வெலிஹேன கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வலிவேரியவில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டார்.
கடந்த ஐந்து நாட்களாக வெலிஹேன இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு இலட்சக்கணக்கான மக்கள் தமது இறுதியஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
நேற்று மாலை பூரண அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இடம் பெற்றன.
நண்பகல் 12 மணிக்கு அன்னாரது இல்லத்தில் கத்தோலிக்க மதச்சடங்குகள் இடம்பெற்ற பின்னர் ஒரு மணிக்கு பூதவுடலைத்தாங்கிய பேழை வெலிஹேன ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே விளையாட்டரங்குக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
வீட்டு வாசல் வரை அவரது குடும்பத்தினரால் எடுத்துவரப்பட்ட பூதவுடல், வாசலில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மாணவர்களால் பொறுப்பேற்கப்பட்டது. அதனையடுத்து கட்டானைத் தொகுதி கிளைகளினாலும் தொடர்ந்து கட்டுநாயக்கா நகர சபைத்தலைவர் தலைமையிலான உறுப்பினர்களாலும், நீர்கொழும்பு மாநகர சபை முதல்வர் தலைமையிலான உறுப்பினர்களாலும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களாலும் வரிசைக்கிரமமாக உடலைத்தாங்கிய பேழை விளையாட்டு மைதானம் வரை எடுத்து வரப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் கூடிய உத்தியோக பூர்வ நிகழ் ச்சிகள் இடம் பெற்றன.
முதலில் கத்தோலிக்க, பௌத்த, இந்து, இஸ்லாமிய மதப் பெரியார்களின் சமய நிகழ்ச்சிகளும் அனுசாசன உரைகளும் இடம்பெற்றன.
அடுத்து பௌத்த சமயப்படியிலான மத்தகவஸ்தர பூஜை இடம்பெற்றதையடுத்து, ஜனாதிபதியின் அனுதாபச் செய்தியை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வாசித்தார். அடுத்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கருஜயசூரிய ஆகியோரின் இரங்கலுரைகள் இடம்பெற்றன.
அதன் பின்னர் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருந்து கிடைக்கப்பெற்ற அனுதாபச் செய்திகள் வாசிக்கப்பட்டன.
இந்த இரங்கலுரைகளையடுத்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் மகள் சமுத்தி பெர்னாண்டோ புள்ளே சிங்களத்திலும் மகன் பானுகி பெர்னாண்டோபுள்ளே ஆங்கிலத்திலும் நன்றியுரைகளை வழங்கினர்.
இந்த அரச மரியாதையுடன் கூடிய நிகழ்வில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா, சபா நாயகர் லொக்குபண்டார உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள்,மாகாண முதலமைச்சர்கள், ஆளுனர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பெருமளவினர் கலந்து கொண்டனர்.
மறைந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கு இறுதிவிடை கொடுப்பதற்காக கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
அரச மரியாதை வைபவம் முடிவுற்றதும் விளையாட்டு மைதானத்திலிருந்து பூதவுடல் வெலிஹேன கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதி ஆராதனை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இதனையடுத்து பூதவுடல் வெலிஹேன ரோமன்கத்தோலிக்க சேமக்காலைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது முதலே மழை கொட்டிக் கொண்டிருந்த போதிலும், மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மரணச்சடங்கு நிகழ்ச்சிகளையொட்டி நீர்கொழும்பு கட்டானை பிரதேசமெங்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. படைத்தரப்புடன் ஆயிரக்கணக்கில் பொலிஸார் பாதுகாப்புக் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நீர்கொழும்பிலிருந்து வெலிஹேன வரையில் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.