* கடுமையாக எச்சரிக்கிறது ஐ.நா.
உள்நாட்டில் நெல் அறுவடையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வும் மோதல்கள் அதிகரித்துச் செல்வதும் பல்லாயிரக்கணக்கான இலங்கையருக்கு போதியளவு உணவு கிடைக்காத நிலையை அதிகரிக்கச் செய்திருப்பதாக ஐ.நா.உணவுத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டின் 2 கோடி சனத்தொகையில் அரைவாசித்தொகையினர் தினமும் ஆகக் குறைந்தது 2030 கலோரியையே உள்ளெடுப்பதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அறிய வருகிறது.
சராசரியாக வறியவர் ஒருவர் 1,696 கலோரியை தினமும் உட்கொள்கிறார். அதேசமயம் சாதாரண வாழ்க்கைத்தரமுள்ளவர் 2194 கலோரியை உட்கொள்கின்றார் என்று தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
போஷாக்கின்மை கிராமப் பகுதிகளிலும் வட,கிழக்கிலும் அதிகளவில் காணப்படுவதாக ஐ.நா.வின் உலக உணவுத்திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தீவின் மத்திய பகுதியிலுள்ள வறள் வலயப்பகுதியிலும் போஷாக்கின்மை அதிக அளவில் காணப்படுவதாக உலக உணவுத்திட்டத்தின் இலங்கையிலுள்ள பிரதித்தலைவர் ஜேன் வைவெஸ் லெக்குய்ம் கூறியுள்ளார்.
கல்வி அறிவின்மை, சுகாதார வசதிக்குறைவு என்பனவும் போசாக்கின்மை மிகத் தாழ்ந்த மட்டத்திலிருப்பதற்கான காரணிகளில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின், சிறுவர் நிதியத்தின் தகவல் தொடர்பு அதிகாரியான கோர்டன் வீஸ் போஷாக்கின்மை தொடர்பாக தெரிவிக்கையில், விவசாயச் செய்கை நடைபெறும் கிராமப்புற மக்கள் மத்தியில் வறுமையும், உடல் வலுவுக்கான சக்திதேவையும் பொதுவான பிரச்சினைகளாக இருந்துவருவது இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக விவசாயப் பகுதிகளில் வாழும் மக்கள் கூடுதலான உடலுழைப்பில் ஈடுபடுபவர்களாக உள்ள அதேவேளை, கூடுதலான கலோரி உணவின் தேவையும் அவர்களுக்கு உள்ளது. இப்பகுதி மக்கள் வறியவர்களாக இருப்பதும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லீ குய்ம் இலங்கையில் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நிலை தொடர்பாக தகவல் தருகையில், நாட்டில் தலா ஒருநபருக்கான வருடாந்த வருமானம், 1599 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நிறை குறைந்த சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் கவனத்துக்குரிய ஒரு பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உண்மையில், இலங்கையின் சிசுமரணங்களின் அதே வீதாசாரத்தினை கொண்டுள்ள இன்னொரு நாட்டுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் போஷாக்கற்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது எனவும் லீ குய்ம் தெரிவித்தார்.
நாட்டில் நிறைகுறைவாக உள்ள 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகளின் எண்ணிக்கை 14 வீதமாக உள்ள நிலையில், 5 வயதுக்கும் மேற்பட்ட நிறைகுறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 29 வீதமாக காணப்படுகின்றமை அதிர்ச்சியான ஒரு தகவலாகும்.
மேலும், அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை மற்றும் போஷாக்கின்மை பற்றிய பிரச்சினைகள் கவனத்திற்குரிய விடயங்களாக இருப்பதுடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், மற்றும் வவுனியாவில் சில பகுதிகளிலும் இதன் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
மேலும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்கள், அவசர மனிதாபிமான உதவி கோரி நிற்கும் இடங்களாகவும் இனங்காணப்பட்டுள்ளன. தேசிய மட்டத்தில் போஷாக்கின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதற்கு, பண வீக்கம் 17.5 வீதமாக உயர்ந்துள்ள நிலை காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் பிரதான காரணமாகும்.
மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடரும் பருவ காலம் தவறிய கடும் மழையும், இதனால் பெரும்போக அறுவடை பாதிக்கப்பட்டு, அரிசியின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும், உலகரீதியாக உணவுப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டின் காரணமாக அவற்றுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பும் இந்த மோசமான நிலைக்கான பிரதான காரணமெனவும் உலக உணவுத்திட்ட அமைப்பின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.