மேற்கிந்தியத் தீவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கை அணியில் 7 இளம் வீரர்கள் அதிரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். உலக சாதனை வீரர் முத்தையா முரளிதரன் அணியில் சேர்க்கப்படவில்லை.
மேற்கிந்தியத் தீவு - இலங்கை அணிகளிடையே மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டி போர்ட் ஓவ்ஸ்பெயினில் நேற்றுவியாழக்கிழமை நடைபெற்றது.
2011 உலகக்கிண்ணப் போட்டியையொட்டி பெரியளவில் மாற்றம் செய்துள்ளது இலங்கை அணி. அடுத்த உலகக்கிண்ணப் போட்டிக்கு தயார் செய்வதற்காகவே புதுமுகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அணிக் கப்டன் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது;
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை. ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு வீரரும் தங்களது திறமையை அதிகபட்சமாக வெளிப்படுத்த வேண்டும். உலகக் கிண்ணப் போட்டிக்காக புதுமுக வீரர்களை இப்போதிருந்தே தயார்படுத்த வேண்டும். அதற்காகவே எப்போதும் இல்லாத வகையில் புதுமுகங்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய மைக்கேல் வன்டொற், மலிந்த வர்ணபுரா, திலான் சமரவீர, பிரசன்ன ஜெயவர்த்தன, முத்தையா முரளிதரன், இஷாரா அமரசிங்க, சாணக்க வெலகெதர ஆகியோருக்கு பதிலாக உப்புல் தரங்கா, சாமர கப்புகெதர, அஜந்த மெண்டிஸ், மஹேல உடவட்ட, ஜெஹான் முபாரக், கௌசல்ய வீரரத்ன, மலிங்க பண்டாரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.