கான்பூர் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருப்பது கவலையளிப்பதாகத் தென்னாபிரிக்க கப்டன் ஸ்மித் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென்னாபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் `டிரா' ஆனது. ஆமதாபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா இனிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் இன்று கான்பூரில் தொடங்குகிறது.
டெஸ்ட் தரவரிசையில் தற்போது இரண்டாவது இடத்திலிருக்கும் இந்திய அணி தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதையடுத்து ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும் வகையில் தயார் செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி,ஐ) கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாயின. இதை பி.சி.சி.ஐ. மறுத்து விட்டது.
ஆடுகள பராமரிப்பாளர் சிவகுமாரும் இக்குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. இது குறித்து அவர் கூறுகையில்;
"எங்களுக்கு யாரும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வழக்கம் போல் ஆடுகளத்தைப் பராமரித்து வருகிறோம். இங்கு முதலில் ஆடுவது நல்லது. போகப் போக ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் மாறி விடும்" என்றார்.
தற்போது ஆடுகளம் அதிகம் வெடிப்புடன் காணப்படுகிறது. இது சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானது. வழக்கமாக டெஸ்ட் போட்டிகளின் மூன்று அல்லது நான்காவது நாளுக்கு பின்னர் தான் ஆடுகளத்தில் வெடிப்பு ஏற்படும். இம்முறை தொடக்கத்திலேயே வெடிப்புக் காணப்படுவது சுழற்பந்து வீச்சை சமாளிக்கத் திணறும் தென்னாபிரிக்க வீரர்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான போட்டிக்கான ஆடுகளம் ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக அமைக்கப்பட்டிருப்பது கவலை தருகிறது என்கிறார் தென்னாபிரிக்க கப்டன் ஸ்மித்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில்;
கான்பூர் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இது சிறிது கவலையளிக்கிறது. இருந்தாலும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நன்றாகப் பயிற்சி செய்துள்ளோம். இதனால், இரு அணிகளுக்கும் எதுவும் கடினமாக இருக்காது. போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்.
ஆட்டத்தில் முழுக் கவனம் செலுத்த இருக்கிறோம். இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச் சாளர்களுடன் களமிறங்குமென செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இருவரையும் முதல் இரண்டு டெஸ்டில் சிறப்பாக எதிர்கொண்டோம். அதனால், இம்முறையும் எளிதாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
மூன்றாவது போட்டிக்கு அணியைத் தேர்வு செய்வதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனுபவம் மற்றும் இளமைக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்படி பல பிரச்சினைகளில் இந்திய அணி சிக்கித் தவிக்கிறதென்றும் ஸ்மித் தெரிவித்தார்.
கான்பூர் டெஸ்டில் நாணயச்சுழற்சி முக்கிய பங்காற்றும். முதலில் வெற்றி வாய்ப்பு அதிகம் என தென்னாபிரிக்க பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்;
ஆமதாபாத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால் கான்பூர் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்படும் என்பதை ஊகித்து வைத்திருந்தேன். இதற்கேற்ப வீரர்களுக்கு பயிற்சியளித்து வருகிறேன். இங்கும் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் வாய்ப்பிருக்கிறது. நாணயச்சுழற்சியில் வென்றால் முதலில் ஆட வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்" என்றார்.