இந்திய அணிக்கும் உலக அணிக்குமிடையிலான `ருவென்ரி-20' போட்டியில் உலக அணி வெற்றிபெற்றுள்ளது.
கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) சார்பில் `உலக 20' ஓவர் போட்டித் தொடர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்திய பாகிஸ்தான் அணி மற்றும் உலக அணி என்று 3 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை 3.24 கோடி ரூபாவாகும். சாம்பியன் ஆகும் அணிக்கு 1.25 கோடி ரூபா பரிசுத்தொகையாகக் கிடைக்கும்.
நேற்று முன்தினம் நடந்த தொடக்கப் போட்டியில் சதீஸை கப்டனாக கொண்ட இந்திய அணியும், கெய்ன்ஸை கப்டனாகக் கொண்ட உலக அணியும் சந்தித்தன. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி.பி.சிங் 63 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) எடுத்தார்.
அடுத்து அதிரடியாக ஆடிய உலக அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வின்சென்ட் 43 ஓட்டங்களும், மார்ட்டின் 67 ஓட்டங்களும் (ஆட்டமிழக்காது), அத்தபத்து 25 ஓட்டங்களும் (ஆட்டமிழக்காது) எடுத்து தங்கள் அணியின் வெற்றியை எளிதாக்கினார்கள். நேற்று 2 ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் உலக அணிகள் மோதின.