கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து இந்திய, தென்ஆபிரிக்க வீரர்களுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய - தென் ஆபிரிக்க அணிகளிடையே 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக இருக்கிறது. மொத்தமுள்ள 40 ஆயிரம் டிக்கெட்டில் புதன்கிழமை வரை சுமார் 2 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்றுள்ளன. கடந்த டெஸ்டில் இந்தியாவின் ஆட்டம் மிகவும் மோசமாக அமைந்தது, சச்சின் டெண்டுல்கர் ஆடாதது ஆகியவை காரணமாக ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டிக்கு வரவேற்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தீவிரவாதிகளின் மிரட்டல் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கான்பூர் முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மைதானத்தை சுற்றிலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய, தென் ஆபிரிக்க வீரர்களுக்கு அதிரடிப் படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் தீவிரவாதிகளின் மிரட்டல் தகவலை கான்பூர் பொலிஸார் மறுத்துள்ளனர். இது குறித்து கான்பூர் ஏ.டி.ஜி.பி. பிரிஜ்லால் கூறியதாவது;
தீவிரவாதிகளின் மிரட்டல் பற்றி எங்களுக்கு தகவலில்லை. ஆனாலும் மாநில அரசு போட்டி நடக்கும் மைதானம், வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரேடியத்திற்குள் செல்போன், தண்ணீர் போத்தல்கள், திடமான பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
11 ஏ.எஸ்.பி. 28, துணை பொலிஸ் கண்காணிப்பாளர்கள், 8 கம்பெனி ஆயுதப்படை பொலிஸார் மற்றும் 2,800 உயர் அதிகாரிகள் மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
ஸ்ரேடியத்தின் நுழைவு வாயிலில் ரகசிய கமெராக்கள் வைக்கப்பட்டுள்ளன. செல்போனை செயலிழக்கச் செய்யும் ஜாம்மர்ஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.