ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை இரத்துச் செய்யும் திட்டமில்லையென்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
ஆனால், சீனாவிடம் சுயாட்சி கேட்டுப் போராடி வரும் திபெத்தியர்கள் ஒலிம்பிக் ஜோதி செல்லும் இடங்களில் எல்லாம் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக பாரிஸில் போராட்டக்காரர்களுக்கு பயந்து இரண்டு முறை தீபத்தை அணைக்கும் நிலை ஏற்பட்டது. ஓட்டமும் முழுமையாக நடக்கவில்லை. முன்னதாக லண்டனிலும் இதேபோன்ற பிரச்சினை ஏற்பட்டது.
திபெத்தியர்களின் தொடர்ச்சியான மிரட்டலால் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் இரத்துச் செய்யப்படலாமென்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஜேக்ஸ் ராக் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது;
ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டத்தை கைவிடும் திட்டம் எதுவுமில்லை. அதுபற்றி விவாதிக்கப்படவுமில்லை. இது தவறான வதந்தி. திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டாலும் தீபத் தொடர் ஓட்டம் தடையின்றி நடைபெறும். வெள்ளிக்கிழமை நடக்கும் எங்களது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் இதுவரை நடந்த நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்யப்படும். இது வழக்கமான நடைமுறையில் உள்ள ஒன்று தான்.
உலகில் உள்ள பல்வேறு மக்கள் வெவ்வேறு இனத்தவர், மதத்தினர், அரசியல் அமைப்புகள் மற்றும் கலாசாரங்களை ஒன்றிணைக்கும் அழகான சின்னம் ஒலிம்பிக் ஜோதி. இதற்கு இடையூறு ஏற்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது. மேலும், இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல தேர்வு செய்யப்பட்ட தடகள வீரர்கள் மற்றும் மக்களுக்கு அந்தப் பொன்னான தருணம் (பாரிஸில்) வீணாகிப் போய் விட்டதே என்று நினைக்கும் போது வேதனை தருகிறதென்றார்.
இதேநேரம், ஒலிம்பிக் ஜோதி 17 ஆம் திகதி டில்லி வருகிறது. மொத்தம் சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் டில்லியில் தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் டெண்டுல்கர், லியாண்டர் பயஸ், நடிகர்கள் சயீப் அலிகான், சோகா அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை கையிலேந்தி வலம் வரவுள்ளனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.