ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்தில் பான்கீமூன் கலந்துகொள்ள?ர்
நியூயோர்க்: சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆரம்ப வைபவத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன் கலந்துகொள்ளமாட்டாரென அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
பான்கீமூன் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கான நிகழ்ச்சி நிரல் பல மாதங்களுக்கு முன்னரேயே தீர்மானிக்கப்பட்டு விட்டதால் இந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ள மாட்டாரென ஐ.நா.பேச்சாளர் மேரி முகாபே தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பான் கலந்துகொள்ளாமை அதனை பகிஷ்கரிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கும் என்பது தொடர்பில் ஐ.நா. பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என நிருபர்கள் தெரிவிக்கின்றனர். முன்னரே தயார் செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இவ் முக்கியமான நிகழ்வுக்கான அழைப்பை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதென்பதை சீன அரசாங்கத்திற்கு சில மாதங்களுக்கு முன்னரேயே பான் தெரியப்படுத்திவிட்டதாகவும் முகாபே தெரிவித்துள்ளார்.
அதாவது சீனாவுக்கெதிரான திபெத்திய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்பதை முகாபே தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணும் இவ் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டாரென கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. பிறவுண் ஒலிம்பிக் போட்டியை பகிஷ்கரிக்கவில்லை எனவும் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வாரெனவும் அவரது அலுவலகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். திபெத் மீதான சீனாவின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பிறவுண் இந்நிகழ்வை பகிஷ்கரிக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் பிறவுணுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷ?ம் இந்நிகழ்வை பகிஷ்கரிப்பது தொடர்பில் வெள்ளை மாளிகை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தகுதியை சீனா கொண்டிருக்கிறதெனவும் ஆனால், வன்முறைகளற்ற வழிமுறைகளில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான உரிமையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டுள்ளனரெனவும் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப வைபவத்திற்கு முன்னர் சீனாவை வந்தடைவதென்ற இலக்குடன் 20 நாடுகளில் ஆரம்பித்துள்ள ஒலிம்பிக் சுடர் லண்டன், பாரிஸ் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ ஆகிய பல்வேறு நாடுகளிலும் திபெத் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களினால் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையை தற்போது ஆர்ஜென்ரீனாவுக்கு ஊர்வலத்தை ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் சுடர் அங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் சந்திக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.