ஹெய்ட்டி துவக்கு சூட்டுச் சம்பவத்தில் 3 இலங்கை இராணுவத்தினர் காயம்
ஹெய்ட்டி தலைநகர் போர்ட் ஒவ் பிறின்சில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த மூன்று இலங்கைப் படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹெய்ட்டியில் தற்போது நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிப் படையில் 600 க்கும் மேற்பட்ட இலங்கை படையினரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், புதன்கிழமை இரவு தலை நகரில் மாட்டிஸ் சான்ற் பகுதியில் ரோந்து சென்ற ஐ.நா படையினர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதில் இலங்கைப் படையினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இதனை ஐ.நா.வும் உறுதிப்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்த மூன்று இலங்கைப் படையினரும் பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் யாரெனத் தெரியவில்லை. ஐ.நா. அமைதிப் படையென்பதால் இவர்கள் பதில் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.
உள்நாட்டுப் போரில் சிக்குண்ட ஹெய்ட்டியில் அண்மைக்காலமாக விலைவாசிகள் அதிகரித்து வருவதற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
காயமடைந்த மூன்று இலங்கைப் படையினரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.