அமெரிக்கா செல்வதற்கு கொழும்பில் தங்கியிருந்த கல்வியங்காடு குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது
?பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறையீடு
அமெரிக்காவிலிருக்கும் மனைவி, மகனுடன் சேர்வதற்கு மகளுடன் கொழும்பில் தங்கியிருந்த திருநெல்வேலி கல்வியங்காட்டைச் சேர்ந்த குடும்பஸ்தரை பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் கைதுசெய்து கடந்த ஒரு மாதமாக தடுத்து வைத்துள்ளதாக கொழும்பிலுள்ள அவரது சகோதரியும் தாயாரும் அமெரிக்காவிலுள்ள மனைவியும் பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனிடம் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் புகார் செய்துள்ளனர்.
2006 ஆம் ஆண்டு முதல் கிம்புலாஎல மாவத்தையில் வசித்து வந்த ஜெயசிங்கம் ஜெயதீஸ் (வயது 29) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கைதாகியுள்ளார். இவரது கைது தொடர்பாக தாயார் லோகம்பாளும் சகோதரி ஜெயரஞ்சனியும் "மக்கள் பணியகத்தில்' நேரடியாக புகார் செய்ததோடு, அமெரிக்காவிலிருந்து மனைவியான சோதிரட்ணம் சுகன்யா தொலைபேசி மூலமாகவும் புகார் செய்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் அவரே ஜெயதீஸ் தொடர்பான தகவலை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம் தெரிவித்ததாகவும் பின்னர் ரஞ்சனை தொலைபேசியூடாக ஜெகதீஸுடன் தொடர்பு ஏற்படுத்தி கதைக்குமாறு கூறிய பொலிஸார் புறக்கோட்டையில் குறிப்பிட்ட ஒரு கடைக்கு வரும்படி அவரை அழைத்ததாகவும் அங்கு வந்த ஜெயதீஸ் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
வீடியோ கடையை யாழ்ப்பாணத்தில் நடத்திய ஜெகதீஸுடன் பிரஸ்தாப இளைஞரான ரஞ்சன் தொழில் புரிந்ததாகவும் அங்கு பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து அமெரிக்காவிலுள்ள தனது மனைவியிடம் செல்வதற்கு கொழும்புக்கு வந்ததாகவும் தெரிவித்த தாயார், ஜெயதீஸ் கியூபாவிலிருந்தும் சவூதி அரேபியாவிலிருந்தும் அமெரிக்கா செல்லும் வழியில் பிடிபட்டு நாடு கடத்தப்பட்டதாகவும் தற்போது மனைவி செய்துள்ள ஏற்பாட்டின் பிரகாரம் ஆறு வயதான மகள் அக்சனாவுடன் அமெரிக்கா செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரே மகனான ஜெயதீஸ் எதுவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவர் என்றும் அவரை விடுவித்து குடும்பத்துடன் சேர்வதற்கு உதவி புரியுமாறும் தாயார் மேலும் கேட்டுக்கொண்டார்.
இக்கைது தொடர்பாக பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு இயக்குநரும் அத்தியட்சருமான நந்தன முனசிங்கவுடன் பிரதி அமைச்சர் தொடர்புகொண்டுள்ளார்.