அமெரிக்க பிரதி நீதியரசருக்கு 20 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கும் புலிகள் இயக்கம்
வன்னிப் பிரதேசங்களைப் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக அரச படையினர் வன்னியின் பல்வேறு கேந்திரப்பகுதிகளிலும் தீவிர இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர். இந்த வகையில் விமானப்படையினரின் குண்டுவீச்சு விமானங்கள் புலிகளின் தரைப்படை முகாம்கள், கடற்புலிகள் முகாம்கள், மற்றும் முக்கிய நிலையங்கள் ஆகியவற்றைக் குண்டுவீசி அழித்துவரும் அதேவேளை, தரைவழியாகவும் இராணுவத்தினர் தீவிர தாக்குதல்களைத் தொடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் புலிகள் இயக்கத்தினர் அரச படையினரின் தீவிர தாக்குதல்கள் காரணமாக வன்னி மற்றும் மன்னாரைச் சேர்ந்த பல்வேறு பிரதேசங்களிலும் பின்வாங்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர். எனவே, இவ்வாறு அரச படையினர் விமானத் தாக்குதல்கள், தரைவழித் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதை எவ்வாறாயினும் நிறுத்தும்படி செய்வதற்காக புலிகள் இயக்கத் தலைமைத்துவம் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக குறிப்பாக அமெரிக்காவிலுள்ள புலிகள் இயக்கத்தினரும் ஆதாரவாளர்களும் அமெரிக்க தரப்பிலிருந்து ஆதரவையும் உதவிகளையும் பெறுவதற்காகப் பல்வேறு வழிகளிலும் செயற்பட்டு வருகின்றனர். இந்த வகையில் பு?ஸ் பேன் எனப்படும் அமெரிக்க முன்னாள் பிரதி நீதியரசரின் உதவியை அமெரிக்க புலிகள் இயக்கத்தினர் நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பு?ஸ்பேன் புலிகளுக்குச் சார்பாகச் செயற்படுவதற்காக அவருக்கு மாதாந்தம் பெரும் தொகை பணத்தைப் புலிகள் இயக்கம் கடந்தகாலங்களில் கொடுத்துவந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுபற்றிப் பிந்திக் கிடைத்துள்ள தகவல்களுக்கேற்ப மேற்படி முன்னாள் அமெரிக்க பிரதிநீதியரசர் பு?ஸ் பேன் புலிகளுக்கு உதவி செயற்வதற்காக மாதம் தோறும் 20,000 டொலர் பணத்தைப் பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புலிகள் இயக்கத்தில் மாதாந்தம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஸ்ரீலங்கா அரச படையினரின் தொடர்ச்சியான தீவிர தாக்குதல்களை நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அது முடியாத கட்டத்தில் யுத்தக் குற்றச்சாட்டுகளின் பெயரில் அமெரிக்க அரசு ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பாதுகாப்புத்துறைத் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இதுபற்றி தெரிவிக்கப்படும் விபரங்களுக்கேற்ப புலிகளிடம் மாதாந்தம் பணம் பெற்றுவருவதாகக் கூறப்படும் இந்த பு?ஸ் பேன் இவ்வாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, ஆகிய உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்குத் தொடர வேண்டுமென்று கூறியிருப்பதுடன் யுத்தக் குற்றச்செயல்களுக்காக விநாயகமூர்த்தி கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, ஆகியோருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
திவயின விமர்சனம்: 06.04.2008