மியன்மாரின் புதிய அரசியலமைப்பு இராணுவ ஆட்சியாளர்களால் வெளியீடு
யங்கூன்: மியன்மாரின் எதிர்க்கட்சிகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான பிரேரணைகளை அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
194 பக்கங்களைக் கொண்ட இப்பத்திரம் அரசின் புத்தக நிலையங்களில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
இவ் அரசியலமைப்புத் தொடர்பான மக்களின் அபிப்பிராயத்தை அறிவதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்தப்படுமென இராணுவ ஆட்சியாளர் ஜிந்தா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு ஆதரவான எதிர்க்கட்சியின் பங்களிப்பின்றி இராணுவ ஜெனரல்களால் வரையப்பட்டுள்ள இவ் அரசியலமைப்பு எதிர்க்கட்சித் தலைவி ஆங்சாங் சூகி அதிகாரத்திற்கு வருவதற்கு தடை விதித்துள்ளது.
இவ் அரசியலமைப்புக்கு 50 வீதமான வாக்காளர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே இது அமுல்படுத்தப்படும்.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படுமென ஜிந்தா உறுதியளித்துள்ளார்.
ஆனால், இப் பத்திரத்தை கடுமையாக விமர்சித்துள்ள இணையத் தளமொன்று இதிலுள்ள புதிய விதிகள் அரசியல் முறைமைகளில் இராணுவத்தின் செல்வாக்கை அதிகரித்திருப்பதாகத் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல்கள் நடைபெற்றால் பாராளுமன்ற கீழ்ச்சபைக்கான 224 ஆசனங்களில் 56 ஆசனங்களும் மேற்சபைக்கான 440 ஆசனங்களில் 110 ஆசனங்களும் இராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாட்டினரை திருமணம் செய்தவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் இப்புதிய விதிகள் தடை விதித்துள்ளது.
ஆங்சாங்சூகி பிரிட்டனைச் சேர்ந்தவரை திருமணம் செய்தமையால் சூகியைக் குறிவைத்தே இப் பிரேரணை உள்ளடக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.