பிறக்கும் புத்தாண்டு ஐக்கியம் சுபிட்சத்தை தோற்றுவிக்கட்டும்
?ஜனாதிபதி ராஜபக்ஷ வாழ்த்து
பிறக்கும் புத்தாண்டு ஐக்கியத்தையும் சுபிட்சத்தையும் ஏற்படுத்தட்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது .
ஐக்கியத்தையும் சுபிட்சத்தையும் கொண்டுவரும் சிங்கள தமிழ் புதுவருடத்தை நாம் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம். விவசாயமும் அது உருவாக்கிய வளமும் புதுவருடத்திற்கு பிறப்பைக் கொடுப்பதை நாம் அறிவோம். கடந்த காலங்களில் எமது அரசாங்கம் மேற்கொண்ட பிரதான நடவடிக்கை யாதெனில் விவசாயத்தை சக்திபெறச் செய்வதனூடாக நிலத்தின் வளத்தை உறுதிப்படுத்த அர்ப்பணித்தமையாகும். இதன் மூலம் தேசம் விசேடமான அடைவுகளை பெற்றது என்பதை நாம் அறிவோம். எனவே தேசம் அதன் கௌரவத்தை உணர்ந்து கொண்ட சந்தர்ப்பத்தில் இப்புதுவருடம் உதயமாகியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
அதேபோல் இரு தசாப்தங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்கள் இப்புதுவருடத்தை தமது குடும்பங்களுடன் சந்தோஷமாக கொண்டாடுவதைக் காண்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. நாம் ஒன்றிணைந்து புதுவருட சம்பிரதாயங்களில் ஈடுபடுவது தேசத்தை பலப்படுத்துவதற்கு உதவுமென்பது எனது நம்பிக்கையாகும்.
புது வருடத்தின் மரபுகளையும் சம்பிரதாயங்களையும் பேணுவதன் மூலம் ஏற்படுகின்ற ஐக்கியம், சகோதரத்துவம் என்பன நாட்டின் சுபிட்சத்திற்கு வழியமைக்கின்றது. இந்த எதிர்பார்ப்பை மதித்து இம்முறை புதுவருடத்தை சம்பிரதாயபூர்வமாக பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். பண்டிகைக் காலங்களில் மதுபானம் அருந்துவதிலிருந்து விலகி புதுவருடத்தைக் கொண்டாடுவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருக்கும்படி நான் நாட்டு மக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காக புதுவருட காலத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கின்ற முப்படையினர், பொலிஸாருக்கும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவருக்கும் எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்!