நிவாரண உதவிகளில் தோட்ட பகுதி தொழிலாளர் மீது பெரும் பாரபட்சம்
பதுளை நிருபர்
அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் தோட்டத் தொழிலாளர்களை சென்றடைவதற்கு அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கைகள் பெரும் தடையாக இருந்து வருகின்றன.
கடந்த வருடம் அக்டோபர் மாதம், மேற்கண்ட அமைச்சினால் ஒஅ/ஏஅ/குஅMஅ/2007/10 என்ற தலைப்பிலான சுற்றறிக்கைக்கமையவே, தோட்டத் தொழிலாளர்களுக்கான நிவாரண உதவிகள் தடைப்பட்டுள்ளன.
இச்சுற்றறிக்கைகள் மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. இச்சுற்றறிக்கைகளில் மாதம் மூவாயிரம் ரூபாவுக்கு மேல் வருமானமுள்ள எந்தவொரு குடும்பத்தினரும் அனர்த்த, நிவாரண அமைச்சின் நிவாரண உதவிகளைப் பெற தகைமையற்றவர்களென்று குறிப்பிடப்பட்டிருப்பதுவே தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்படைவதற்கான காரணமாகும்.
தோட்டத் தொழிலாளர்கள் ஏழ்மை நிலையிலிருந்த போதிலும், ஐயாயிரம் ரூபா வரையிலான வருமானத்தைப் பெறும் ஆவணப்படுத்தப்பட்ட சம்பளத்தை, அவர்கள் பெற்று வருவதினால், அனைத்து நிவாரண உதவிகளும், தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய நிலையினால், பதுளை மாவட்டத்தின் வௌஸ்ரை, டயரபா, உடுவரை, நியூபேக், தெல்பத்தை போன்ற பெருந்தோட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் அகதி வாழ்க்கையை வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் குறிப்பிட்ட அமைச்சின் செலவில், தொழிலாளர்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்படுவதும், ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவகத்தின் உத்தரவிற்கமைய முன்னெச்சரிக்கையுடன் வெளியேறிய பதுளைப் பகுதி தோட்டத் தொழிலாளர்கள் கூடாரங்களிலும் தகரக் கொட்டகைகளிலும் தொடர்ந்தும் தஞ்சமடைந்துள்ளனர்.
பதுளை வௌஸ்ஸை பெருந்தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளில் திடீரென ஏற்பட்ட வெடிப்புகளையடுத்தே தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவகத்தினால், தொழிலாளர் குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும், பதுளைப் பகுதித் தோட்டங்களில் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியின் பேரில் கடன் திட்டத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்ட வீடுகளும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புற்றிருப்பதனால், அங்கு வாழ்ந்து வந்த தோட்டத் தொழிலாளர்களும் தகரக் கொட்டகைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
பதுளைப் பகுதியைச் சேர்ந்த டயரபா தோட்டத்திலேயே இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இவர்களுக்கான வீடுகளை, அமைச்சு மூலம் நிர்மாணிக்க முடியாமலுள்ளன.
மனித நேயத்துடன் இவ்வகையில் பாதிப்புற்றிருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவிசெய்ய முனைந்த போதிலும், சுற்றறிக்கை பெரும் தடையாக இருப்பதாக பதுளை மாவட்ட பிரதேச செயலாளரொருவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சுற்றறிக்கையை மீளப்பெற்று உண்மையாகவே பாதிக்கப்பட்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான யதார்த்த பூர்வ நடைமுறை மேற்கொள்ளப்படல் வேண்டும். இதுவிடயமாக மலையகம் சார்ந்த பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, அமுலிலிருக்கும் சுற்றறிக்கையை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.