யுத்த அரக்கனின் பிடிக்குள் நாடு சிக்கி மனித உயிர்களும் வளங்களும் அழிவு
?மதுரங்குளியில் சிலாபம் ஆயர்
முந்தல் நிருபர்
நாட்டின் சகல இன மக்களும் எதிர்பார்த்துள்ள சமாதானம் எப்போது மலரும் என்பதுதான் இன்றுள்ள கேள்வியாகும் . இந்த நாட்டில் சகல மக்களும் சமாதானத்துடனும் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதற்கான உரிமையுண்டு.
இவ்வாறு சிலாபம் மறை மாவட்டத்தின் ஆயர் அதி. வண . வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை கரித்தாஸ் ஜனசவிய செடெக் நிறுவனத்தின் சமாதான தீபம் ஏற்றும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது கூறினார்.
மதுரங்குளி செமுத்து தொடுவாய் ஆலய முன்றிலில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்துபேசிய ஆயர் மேலும் கூறியதாவது; ""யுத்தம் என்கின்ற ஒரு கோர அரக்கனின் பிடிக்குள் சிக்கி நாட்டின் சகல வளங்களும் மனித உரிமைகளும் அழிகின்றன. இந்த யுத்தம் யாருக்குத் தேவை? யுத்தம் தமிழ் மக்களுக்கா அல்லது சிங்கள மக்களுக்கா தேவை என்பது எல்லோரின் மனதில் எழுகின்ற கேள்வியாகும்.
நிச்சயமாக தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் சில பிரச்சினைகள் உண்டு. ஆனால், அவர்கள் இந்த யுத்தத்தை விரும்பவில்லை. சிங்கள மக்களும் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால், ஒரு சிலர் விரும்புகின்றனர்.
யுத்தத்தின் மூலம் சந்தோசம் அடைகின்ற சிலரும் சம்பாதிக்கின்ற சிலரும் வடக்கிலும், தெற்கிலும் உள்ளனர். இவர்களின் பிடியில் சிக்கி முழு நாடும் சின்னாபின்னமாகிக் கொண்டு போகிறது.
இந்த யுத்தம் சிறியதாக இருந்தாலும் முழு மனித சமுதாயத்தையுமே கொன்றுவிடும் அளவிற்கு பயங்கரமானது.
இவ்வாறான ஒரு காலகட்டத்தில் இந்த மாதிரியான சமாதான எண்ணக்கருவை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முன் நின்று உழைக்கும் கரித்தாஸ் நிறுவனத்தின் சேவையை நான் பாராட்டுகின்றேன்.
ஆகவே, எதிர்காலத்தில் நாட்டில் யுத்தம் மறைந்து சமாதானம் மலர இறைவனை பிரார்த்திப்போம்' என்றார்.
கொத்தாந்தீவு தக்கியா பேஷ் இமாம் மௌலவி ஏ. காமீது (பாறி) பேசுகையில்; ""நாம் அனைவரும் இலங்கை நாட்டு மக்கள். எம்மிடத்தில் சமாதானமும் சகோதரத்துவமும் இருக்க வேண்டும். இதனையே சமயங்கள் வலியுறுத்தியுள்ளன. ஆகவே நாம் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் யுத்தம் முடிவுக்கு வர வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்' என்றார். தொடுவாய் பங்குத்தந்தை வணபிதா பீற்றர் உபாலி அடிகளாரும் உரையாற்றினார்.