வவுனியா தாலிக்குளம் வீடொன்றில் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான நகை கொள்ளை
வவுனியா நிருபர்
வவுனியா பூவரசன்குளப்பிரிவு தாலிக்குளத்தில் கடந்த புதன் இரவு நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஐவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். தலையிலும் கைகளிலும் பலத்த அடிகாயம் காணப்படுவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய வாக்கு மூலங்களை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
கொள்ளையர்கள் நால்வர் ஆயுதங்களுடன் வீட்டினுள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை பலமாகத் தாக்கிய பின்னர் நகைகள் பணங்களை கொள்ளையடித்துள்ளனர். முதலில் வீட்டுக்காரர்கள் கதவை திறக்காத நிலையில் கதவை கோடரியினால் கொத்தியே திறந்துள்ளனர்.
அத்துடன் அங்கிருந்த சிறுமிகளுடைய காதுகளில் இருந்த நகைகளையும் பலவந்தமாகவே பறித்தெடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிவான் பொலிஸாரை கேட்டுள்ளார். வவுனியாவில் தொடரும் இரவு நேரக் கொள்ளைகள் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். விழிப்புக்குழுக்களை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுள்ளனர்.