"மனிதநேயமிக்கதோர் மக்கள் தலைவராக விளங்கியவர்'
பதுளை நிருபர்
மனித நேயமிக்கதோர் மக்கள் தலைவராக இருந்துவந்த நெடுஞ்சாலை, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இழப்பு எவ்வகையிலும் ஈடுசெய்யக்கூடியதாக இல்லை. இவ் இழப்பானது சமூகமொன்றிற்குமட்டுமல்லாது, இந்நாட்டிற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும் என்று ஊவா மாகாணசபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; ஒவ்வொரு சிரேஷ்ட அரசியல் வாதியும் படுகொலை செய்யப்படும் போது, நாட்டின் இனப்பிரச்சினை உடன்தீர்க்கப்படல் வேண்டுமென்று குரல் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆனால், இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதாகத் தெரியவில்லை. படுகொலைகள் தொடர்ந்து செல்கின்றது. இதன் மூலம் நாட்டின் பெறுமதிமிக்க உயர் அரசியல் தலைவர்களை, நாம் இழந்து கொண்டிருக்கின்றோம்.
இனியும் இதுபோன்று படுகொலைகள் தொடர களம் அமைக்கப்பட்டுவிடக்கூடாது. உடன் இக்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்டவர்கள், உடனடியாக முன்வந்து இனப்பிரச்சினை தீர்விற்கான, ஆக்கபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இழப்பினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.