யாழ்ப்பாணக் குடாநாட்டில் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸார் பொதுமக்கள் நல்லுறவைப் பேணுமுகமாக வடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி பொலிஸ் நிலையங்கள் தனித்தனியாக மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவையை நடாத்தத் திட்டமிட்டுள்ளன. இந் நடமாடும் சேவைகள் நாளை பருத்தித்துறை பொலிஸ் பிரிவு மக்களுக்கு அல்வாய் ஷ்ரீலங்கா வித்தியாலயத்தில் நடைபெறுமென பருத்தித்துறை பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி ஜே.எச்.கே.லியனகே தெரிவித்துள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை கரவெட்டி கலிகைச்சந்தி கந்தன் ஆலயச் சுற்றாடலில் நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.ஜே.ஹேரத் தலைமையின் அதே தினத்தில் நடைபெறும். வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை வல்வெட்டித்துறை நகரசபை கட்டிடத்தில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி டபிள்யு.சுமித்திஸங்க தலைமையில் நடைபெறும்.
இந்த நடமாடும் பொலிஸ் சேவையின்போது பிரதேச செயலர்கள், இறப்பு பிறப்பு பதிவாளர்கள், காணி அதிகாரிகள் ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள் , உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள், கிராமசேவை அதிகாரிகள், வலயக்கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என வடமராட்சிப் பிரதேச பொலிஸ் உதவிப் பொறுப்பதிகாரி ஜே.எச்.கே. லியனகே தெரிவித்தார்.
நடமாடும் பொலிஸ் சேவையில் பிரதே சத்தில் களவு, வழிப்பறிக்கொள்ளைகள், தாக்குதல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மக்கள் விழிப்புக்குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல், திருமணமாகியும் விவாகப்பதிவு செய்யாதவர்களை பதிவு செய்தல், போரினால் பிறப்பை பதிவுசெய்யாத சிறுவர்களின் பதிவை மேற்கொள்ளல், பாடசாலைகளை விட்டு இடைவிலகிய சிறார்களை மீண்டும் பாடசாலைகளில் இணைத்தல், பொதுப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகாணுதல், வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கட்டாயம் பெறவைப்பது போன்ற விடயங்கள் இந்நடமாடும் சேவையில் இடம் பெறவுள்ளன.