* முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணம் கிழக்குத்தான். எனவே, இதன் முதலமைச்சர் முஸ்லிம் ஒருவராகவே இருக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் பிரதியமைச்சரும் கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
கடந்த திங்கள் மாலை கிண்ணியா புகாரிச் சந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 40.1 வீதத்தினராகவும் தமிழ் மக்கள் 39.9 வீதத்தினராகவும் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி கிழக்கு மாகாணத்தின் ஆசனங்கள் 14 முஸ்லிம்களுக்கும் 14 தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
இத்தேர்தலில் எந்தச் சமூகம் அதிக ஆசனங்களைப் பெறுகிறதோ அந்தச் சமூகத்திற்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, முஸ்லிம் சமூகத்துக்கு மிக முக்கியமான தேர்தல் இது.
1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் நாம் ஒன்றுபட்டு வாக்களித்ததால் 17 ஆசனங்களைப் பெற்றோம். அதுபோன்றதொரு ஒற்றுமை இத்தேர்தலிலும் தேவை. ஆகையால் ஐ.தே.கட்சியிலுள்ள முஸ்லிம்களும் எம்மோடு இணைந்துகொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஏ.ஸி.அப்துல் நஸார், மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர்களான டாக்டர் ஏ.எம்.லாபிர், திடீர் தௌபீக் ஆகியோரும் உரையாற்றினர்.