மன்னார் மாவட்டத்தில் மடு, மாந்தை பிரதேசத்தில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக சுமார் 25 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து வொள்ளாங்குளம் அகதி முகாமில் தங்கியுள்ளதாக மன்னார் அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிலங்குளம் வீதி போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளதினால் இவர்களுக்குரிய நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதிலும் தாம் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வெள்ளாங்குளத்தில் தங்கியுள்ள இந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஓமந்தை வழியாகவே அனுப்பி வைக்க வேண்டியுள்ளதாக மன்னார் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெற்று வருவதினால் கல்வி செயல்பாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறாயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம், இடம்பெயர்ந்தோருக்கான தற்காலிக கூடாரங்கள், குடிநீர் உள்ளிட்ட அவசர அடிப்படைத் தேவைகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொண்டு வருகின்றது.
ஐ.நா மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவிகளை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.