புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பயணிகளின் நலன்கருதி விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்களை கொண்டு வருவதற்காக அதிகார சபை பிராந்திய அதிகார சபைகளுடன் பேச்சுகளை மேற்கொண்டு கூடியளவிலான பஸ் சேவைகளை பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் டி.எம்.சோமசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணிகள் நலனைக் கருத்திற்கொண்டு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் இன்று முதல் 50 வீதமான பஸ் சேவைகளை மேற்கொள்ளவுள்ளதுடன் 16 ஆம் திகதி முதல் வழமையான சேவைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க விசேட ரயில் சேவைகளை சனிக்கிழமை முதல் மேற்கொள்ளவுள்ளதாக ரயில் சேவைகள் அத்தியட்சர் மாலக்க பண்டார தெரிவித்துடன் பயணிகள் மட்டுமன்றி அவ்வப்பகுதிகளுக்கு தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.