* அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்றால் மட்டுமே சிறந்த பெறுபேறுகளை பெறமுடியுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
லண்டனிலிருந்து பி.பி.ஸி. செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
சர்வகட்சி பிரதிநிதிகள் குழு 90 வீதமான விடயங்களை ஏற்கனவே முடித்துள்ளதுடன் இது தொடர்பிலான ஆவணங்களை தயாரித்துவிட்டது. இன்னும் 10 வீதமான பகுதியே உள்ளது. இப்போது இது தொடர்பில் சுமுகமாக செல்லும் நிலை காணப்படுவதால் சில மாதங்களில் முழு ஆவணமும் பூர்த்தியாகுமென நம்புகின்றேன்.
அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடலை நடத்தி ஒரு கால அட்டவணைக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது கடினமான விடயமாகும்.
முதற்படியாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் மொத்தம் 14 கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் மத்தியில் இணக்கப்பாடு எட்ட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி முன்னர் எமது குழுவில் கலந்துகொண்டு பின் விலகியுள்ளன.
தற்போது ஐ.தே.க. அதிகாரபூர்வமற்ற வகையில் மீண்டும் வந்திருக்கின்றது. எமது 90 வீதமான இணக்கம் காணப்பட்ட விடயம் தொடர்பான ஆவணத்தை அக்கட்சியின் சார்பில் எமது குழுவில் பங்குகொண்ட கே.என்.சொக்ஷியிடம் வழங்கியுள்ளேன்.
இது தொடர்பில் அவரது மற்றும் அக்கட்சியின் கருத்தை பெற்று வருகின்றோம். முழுமையான இணக்கப்பாட்டை எட்டும்போது இந்த நடைமுறையில் ஐ.தே.க. திரும்பி வரும் நிலை ஏற்படும்.
தற்போதைய நிலையில் நாம் இதில் பங்குகொள்ளுமாறு ம.வி.முன்னணியையும் கோரியுள்ளோம். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பெறமுடியவில்லை. எனினும், ஐ.தே.க. பங்குகொள்ளும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் 3 இல் 2 வீத ஆதரவை பெறமுடியும்.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு 3 இல் 2 வீத ஆதரவு அவசியமானது. இவ்வாறான சூழ்நிலையில் தற்போதைய அரசியலமைப்பையும் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக செயற்படுத்தக் கூடிய பிரேரணைகளை நாம் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளோம்.
அந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமர் தலைமையிலான கட்சி தலைவர்களையும் சேர்த்து ஒரு உபகுழுவை ஜனாதிபதி ஏற்படுத்தியிருக்கின்றார்.
ஒரு தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவிரும்பும் பட்சத்தில் இதில் இணைந்து கொள்வதற்கு ஜனாதிபதியின் உடன்பாடு பெறப்பட்டுள்ளது. ஆகவே, இது தொடர்பில் அக்கட்சியின் உறுப்பினரான சம்பந்தனுடன் 2 மணி நேரம் பேசினேன். அத்துடன், சிநேகபூர்வ சந்திப்புகளின் போதும் நான் பேசியுள்ளேன்.
எனினும், விடுதலைப் புலிகள் எப்போது பேச்சுக்கு வருகின்றார்களோ அப்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யதார்த்தபூர்வமான பங்களிப்பை வழங்க முடியுமென இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தருணத்தில் தான் இந்த நடைமுறைகளை மிகவும் சிறந்த செயற்பாட்டு தரத்துடன் நாம் கொண்டு செல்ல முடியும். தற்போதைய சூழ்நிலையில் புலிகள் பேச்சுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது முறைக்குள் வருவது அவசியம் என உணரும். இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.
இதேவேளை, மேற்படி அமைச்சர் குழுவுடன் சென்றுள்ள ஐக்கிய சோஷலிச கட்சி பிரதிநிதிகள் ஐக்கிய ராஜ்ய சோஷலிச தொழிலாளர் கட்சியின் முன்னணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இச்சந்திப்பில் `இலங்கையில் யுத்தத்தை நிறுத்து' என்ற தலைப்பில் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன் இதற்கு அரசியல் கட்சிகளுக்கு உந்துதல் அளிக்கவேண்டுமென ஐக்கிய சோஷலிச கட்சியின் சிறிநாந் பெரேரா பேசுகையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசையும் ஆயுதப் படையினரையும் அதிகளவில் விமர்சித்துள்ளதுடன், கிழக்கு உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் விமர்சித்துள்ளார்.
வடக்கு போரினை அரச படையினர் வெல்ல முடியாது எனத் தெரிவித்ததுடன் ஐக்கிய சோஷலிசக் கட்சி இலங்கை தமிழரின் உரிமைகளை மதிக்கின்றது. எனினும், தமிழ் ஈழம் என்ற பிரிவினையை ஏற்கவில்லையெனவும் தெரிவித்தார்.