* ஹசனலி தெரிவிப்பு
"முஸ்லிம்களுக்குப் பலமட்டங்களில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் முகவரியைத் தேடிக் கொடுத்துள்ள எழுச்சியை முறியடிப்பதற்கு பேரினவாதிகள் எம் சமூகத்தினர் சிலரைப் பாவித்து மேற்கொள்ளும் ஆபத்தான சூழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் வியூகமே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் குதித்துள்ளதாகு"மென ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.ரீ.ஹஸனலி கூறினார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் (யானைச் சின்னத்தில்) போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்று நிந்தவூர் கே.எம்.ஏ.காதர் ஞாபகார்த்த சுகாதார நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஹஸனலி தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது;
"எமது மண்ணையும் முஸ்லிம் சமுதாயத்தின் அடையாளத்தையும் உரிமைகளையும் காப்பாற்றுவதற்காகவே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பல வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகின்றோம்.
பல கழுத்தறுப்புகளையும் காட்டிக்கொடுப்புகளையும் செய்து பேரினவாதிகளின் கையை ஓங்கச் செய்யும் சதி நடவடிக்கைகளை முறியடிக்கும் வண்ணமே நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.
பல தேர்தல்களில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டிருக்கின்றோம். அநியாயத்தை முறியடிக்கவும் எமது இறுதி இலக்கை அடைவதற்கான நகர்த்தலாகவும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணைவு அமைகின்றது.
முஸ்லிம் காங்கிரஸைப் பூண்டோடு அழித்தொழிக்க தொடர்ச்சியான சதிவேலைகளில் முனைப்புக்காட்டி வரும் ஆளும் அரசதரப்பை விடவும் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளை மதித்தும் அதற்கான ஒத்துழைப்பை நல்கியும் வருகின்றது. ஒற்றையாட்சியை எதிர்த்து சமூகரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கும் அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டுமென அக்கட்சி வலியுறுத்துகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி சர்வகட்சிக் குழுவிற்கு சமர்ப்பித்த ஆலோசனைகளில், எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறும் போது முஸ்லிம்கள் தனித்தரப்பாகப் பங்குபற்ற வேண்டுமெனவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
ஆனால், பத்தாயிரம் அல்லது பதினையாயிரம் சிங்கள வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, கிழக்கில் முஸ்லிம்களின் தாயகம் இருக்கிறது என்ற கோட்பாட்டை மறுக்கிறேன் எனக்கூறும் புல்லுருவித் தலைவர்களும் நம் சமூகத்திலுள்ளனர்" இவ்வாறு அவர் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட தேர்தல் பிரசாரக் குழுத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கருத்து வெளியிடுகையில்;
"கிழக்கை மீட்டெடுத்து ஜனநாயக பூமியாக மாற்றியுள்ளோமென்றும் அது சமாதான பூமியென்றும் தம்பட்டமடிக்கும் அரசு மாலை ஆறுமணிக்குப் பின் மக்கள் கூடுவதையும் நாம் பிரசாரக் கருத்தரங்குகள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதையும் தடை செய்கின்றது. ஆனால், அரசு சார்ந்தவர்களுக்கும் அரசின் கைக்கூலிகளுக்கும் இத்தகைய தடைகளில்லாது பல சலுகைகள், கூடியபாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பிரசாரத்திற்கென விடுக்கப்பட்டுள்ள உத்தரவை அரசு உடன் மாற்றவேண்டும். முஸ்லிம் சமூகம் இந்தத் தேர்தலில் கிழக்கை ஆளக்கூடிய சமூகமாக மாறும் நிலைமையை எமது ஒற்றுமை மூலம் தோற்றுவிக்கவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் எமது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படவேண்டும்.
கண்டகண்ட இடங்களில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வீதிச்சோதனைச் சாவடிகள் அகற்றப்படவேண்டும்" என்றார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் அனைவரும் முதன்மை வேட்பாளர் எம்.ரி.ஹஸனலிக்கு ஒருவாக்கை அளிப்பதுடன் பின்னர் ஏனைய விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாமென்ற பிரகடனத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்டார்.