ஆளும் கட்சியின் பிரதம கொரடாவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியினர் கூடி விரைவில் தீர்மானம் மேற்கொள்வார்களென சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவர் வகித்த பதவி வெற்றிடமாகியுள்ளது.
அப்பதவிக்கு ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையுள்ள ஒருவர் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக விரைவில் தெரிவு செய்யப்படுவார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் ஆளும்கட்சிக் கூட்டத்தில் பிரதம கொரடா குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிவாகை சூடும். எமது திட்டங்களுக்கு கிழக்கிலுள்ள மூவின மக்களும் தேர்தல் மூலம் ஆதரவு நல்குவரென எதிர்பார்த்துள்ளோம்.
ரணில் - ஹக்கீம் தேர்தல் கூட்டினைக் கண்டு ஏமாறுவதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல. கிழக்கு மாகாணத்தில் மேலும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க மாகாண மக்கள் தமது ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு நல்குவது அவசியமாகும்.
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் பலர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். ஹக்கீமும், அவர் சகாக்கள் சிலருமே தற்போது அக்கட்சியில் எஞ்சியுள்ள நிலையில் ஐ.தே.க.முஸ்லிம் காங்கிரஸுடன் எவ்வாறு கூட்டுச்சேர்ந்ததென்பதும் எமக்கு வியப்பாகவுள்ளது என்றார்.
இதேவேளை திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரசார பிரதம இணைப்பாளராக அமைச்சர் ஜோன் செனிவிரட்னா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஜெயராஜின் வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.