* ஹான்சன் பௌர் கூறுகிறார்
இலங்கையின் இன நெருக்கடிக்கு வெளிமட்டத்திலிருந்து தயாரிக்கப்படும் தீர்வுத் திட்டம் எதுவும் உரிய பலனை தரமாட்டாது. மாறாக இலங்கை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வொன்றே அனுகூலமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நோர்வேயைப் பொறுத்தவரை இலங்கையர் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தீர்வையே எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கைக்கான ஒஸ்லோவின் விசேட தூதுவர் ஹான்சன் பௌர் தெரிவித்திருக்கிறார்.
வாழும் கலை மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இருநாள் மாநாடொன்று கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. தெற்காசியாவில் சமாதானமும் நல்லிணக்கமும் எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்த இருநாள் மாநாட்டில் `ஆசியாவில் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பான நோர்வேயின் ஈடுபாடு' எனும் கருப்பொருளில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹான்சன் பௌர், வெளிமட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட எந்தவொரு தீர்வையும் அமுல்படுத்த எவரும் முயற்சிக்கக் கூடாதெனவும் உள்மட்டத்திலிருந்து தீர்வை தயாரிப்பதற்கு உதவியளிப்பதே அவசியமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் தமதுரையில் தெரிவித்திருப்பதாவது;
நோர்வேயின் சமாதான இராஜதந்திரமென்பது யாவற்றிலும் பார்க்க முதலாவதாக ஐ.நா.வுடன் சம்பந்தப்பட்டதாகும். சர்வதேச சமாதானம், உறுதிப்பாட்டுக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு தீர்வு காண உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஐ.நா.வாகும்.
எமக்கு அழைப்பு விடுக்கும் தரப்பினருக்கே நாம் (நோர்வே) பேச்சுவார்த்தைக்கான அனுசரணையை வழங்குகின்றோம். நாங்கள் அரசாங்கங்களின் இறைமைக்கு மதிப்பளிக்கும் அதேசமயம், கிளர்ச்சிக்குழுக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் செயற்படுகின்றோம். இந்த உண்மை நிலைக்கு அமைய நாம் பக்கச்சார்பின்றி செயற்படுகின்றோம்.
இலங்கையைப் பொறுத்தவரை 2000 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தார். புலிகளின் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் அழைப்பு விடுத்திருந்தார். அச்சமயம் ஏற்றுக் கொண்ட இலக்கை அடைவதில் நோர்வே தற்போதும் உறுதிப்பாட்டுடன் உள்ளது.
மோதலுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் சமாதான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விதிமுறைகள் தொடர்பான உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும். இதனாலேயே எம்மை நாம் அனுசரணையாளர்களென அழைக்கின்றோம். எந்தவொரு தரப்பினருக்கு குறிப்பிட்ட இந்த வகையான தீர்வைத்தான் காண வேண்டுமென நாம் கூறுவதில்லை. சிக்கலான தருணத்திலும் கூட தம்மை அதிகளவு அதில் சம்பந்தப்படுத்தியவாறு உறுதிப்பாட்டுடன் சமாதான நடவடிக்கைகளில் தொடர்ந்திருந்தாலேயே மத்தியஸ்தர் செயற்பாடு பலனளிக்கும் என்பது எமது கருத்தாகும்.
2006 இல் பேச்சை மீள ஆரம்பிக்குமாறு நோர்வேயை சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக் கொண்டனர். வன்முறைகள் அதிகரித்ததால் நோர்வேயின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. அந்த ஆண்டு டிசம்பரிலும் பல இராணுவ மோதல்கள் இடம்பெற்றிருந்தன. அதனால் நோர்வே அதிகளவில் எதனையும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனை நாம் அரசுக்கும் புலிகளுக்கும் தெரியப்படுத்தினோம். எமது சேவை தேவையென அவர்கள் தெரிவிக்கும் வரை மேலதிகமாக நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதுவும் இல்லையென தெரிவித்தோம். ஆனால், பேச்சுக்கான களத்தை அமைத்துக் கொடுக்கும் எமது பிரதான இலக்கு தொடர்ந்தும் ஆயத்தமாகவே இருக்கிறது. நோர்வே ஆற்றிய பங்களிப்புக்கு நேபாளம் சிறந்த முன்னுதாரணமாகும்.
மோதலுக்கு தீர்வானது அடிப்படையானதும் சர்வதேச பெறுமானங்களுக்கு ஏற்புடையதாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும். மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டுமென்பதில் நோர்வே எப்போதுமே உறுதியாகவுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தைப் பேணிக் கடைப்பிடிக்கவேண்டுமென்பதில் நாம் எப்போதும் உறுதியாக உள்ளோம்.
இலங்கையில் எண்ணெய்க்காகவும் துறைமுகங்களுக்காகவும் ஏனைய விடயங்களுக்காகவும் நாம் ஆர்வம் காட்டுவதாக ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. எமக்கு இந்த விடயங்கள் தொடர்பாக எந்தவொரு ஆர்வமும் இல்லை. இலங்கை, நோர்வே கம்பனிகளின் வர்த்தக ஒத்துழைப்பை நாம் வரவேற்கிறோம். ஆனால், சமாதானம் தொடர்பான நோக்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
இலங்கையில் சகல சமூகங்களும் ஏற்றுக் கொண்ட தீர்வையே எம்மாலும் அங்கீகரிக்க முடியும்.
அரசுகள் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட முன்வந்தால் வளங்களை தந்துதவுவதற்கு நோர்வே தயாராகவுள்ளது.
பிராந்திய ரீதியான தன்மைகள், மோதலுடன் உள்ள தொடர்புகள் குறித்து நோர்வே குறிப்பிடத்தக்க கவனத்தைச் செலுத்தி வருகிறது. அத்துடன் பெரிய சகோதரர் அல்லது ஆர்வமுள்ள சக்திகள் என்பவற்றுக்கும் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக வேண்டியளவுக்கு தகவல்களை நோர்வே பரிமாறி வருகிறது. அவர்கள் ஆக்கபூர்வமான வழிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்காக நோர்வே இதனை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தனியொரு மத்தியஸ்தரின் ஆதரவிலும் பார்க்க பலதரப்பட்ட உதவிகள் தடம்புரண்டு செல்லும் மோதல்களுக்கு தீர்வு காணும் விடயத்தில் அவசியமாகத் தேவைப்படுகிறது. அதனாலேயே சமாதானத்தை உருவாக்குதல், கட்டியெழுப்புதல் போன்றவை சர்வதேச மயப்படுத்தப்படுகின்றமையை நாம் காண்கின்றோம். குறிப்பிட்ட சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க சர்வதேச சமூகம் கூட்டணிகளை உருவாக்கிக் கொள்கிறது. தேவைப்படும் வளங்கள் மற்றும் நீண்ட காலத்துக்கு நடவடிக்கைகள் நிலைத்திருக்க இவை தேவையானதாகும்.
சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டதனால் நாம் பெற்ற அனுபவங்கள் என்ன? இதற்கு தேவைப்படும் மூன்று தகைமைகளை நான் சுருக்கமாக உங்களுக்கு கூறுகின்றேன்.
அனுசரணையாளராக இருப்பதற்கு சூடு, சொரணை இருக்கக் கூடாது. எல்லை கடந்த பொறுமை இருக்க வேண்டும். தொலைநோக்கு இருக்க வேண்டும. நீங்கள் நேர்மையின்றி அதிகார விளையாட்டுக்களை ஆட முயற்சித்தால் `மோதலின் கைதியாக' உருவாகும் ஆபத்தே உங்களுக்கு ஏற்படும்.